உணவகங்களில் ஆய்வு
நாமக்கல் ஹைவின்ஸ் என்ற அசைவ ஹோட்டலில் கடந்த 16 சவர்மா வகை சிக்கன் உணவை சாப்பிட்ட 14 வயது பள்ளி மாணவி கடந்த 17ஆம் தேதி உடல் நல்ல கோளாறு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அதே உணவகத்தில் சவர்மா சாப்பிட்ட 43 பேருக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர் மற்றும் சமையலர் மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களின் உத்தரவுப்படி தீவிரமாக உணவகங்களில் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஈரோடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரியான தங்க விக்னேஷ் ஈரோட்டில் உள்ள தனியார் உணவகங்களில் அதிகாரிகளுடன் சென்று தீவிர ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் விபத்தில் கை முறிவு ஏற்பட்டு விடுப்பில் இருந்த நிலையில் தன் உடல் நலனையும் பொருட்படுத்தாது தற்போது ஈரோட்டில் உள்ள பார்பிக்யூ உட்பட பல்வேறு பிரபல உணவகங்களில் இறைச்சி மற்றும் உணவுப் பொருட்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது போன்ற பல்வேறு உணவுப் பாதுகாப்புத் துறையின் உத்தரவுகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.தன் உடல் நலனையும் பொருட்படுத்தாது அதிகாரி செயல்படுவது ஈரோடு அரசு அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Tags :