பள்ளிகொண்டா அருகே மணல் கடத்திய 3 பேர் கைது

by Admin / 29-07-2021 04:25:21pm
பள்ளிகொண்டா அருகே மணல் கடத்திய 3 பேர் கைது


   
பள்ளிகொண்டா அருகே மணல் கடத்திய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.

குடியாத்தம் தாலுகாவில் இருந்து அணைக்கட்டு தாலுகாவுக்கு அகரம்சேரி வழியாக டிப்பர் லாரியில் மணல் கடத்தி செல்வதாக பள்ளிகொண்டா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் ராஜி, மணிவண்ணன், விநாயகம் ஆகியோர் நேற்று அதிகாலை 3 மணியளவில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 அப்போது அகரம்சேரியில் இருந்து பள்ளிக்குப்பம் வழியாக ஒரு டிப்பர் லாரி வந்தது. அந்த லாரியை போலீசார் மடக்கி அதில் வந்தவர்களிடம் விசாரித்தனர். அவர்கள் ஒடுகத்தூரை அடுத்த வண்ணான்தாங்கல் பகுதியைச் சேர்ந்த மயில்வாகனம், பெரியசாமி என்றும், மாதனூரைச் சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் ராம்குமார் என்றும், அவர்கள் டிப்பர் லாரியில் மணல் கடத்தலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via