அமலாக்கத் துறைக்கு எதிராக காவல் நிலையத்தில் மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை புகார்- வழக்கு பதிவு
மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத் தில் அலுவலராக பணியாற்றியவர் அங்கித் திவாரி. இவர், திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிடம், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கை மீண்டும் விசாரிக்காமல் தவிர்க்க, ஏற்கனவே ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலையில், மீண்டும் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திவாரியை இந்த மாதம் 1ம் தேதி கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து, அங்கித் திவாரி பணியாற்றிய மதுரை தபால் தந்தி நகரிலுள்ள அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில் டிசம்பர் 1ம்தேதி மாலை முதல் மறு நாள் காலை 7 மணி வரையிலும் விடிய, விடிய மதுரை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்ய சீலன் தலைமையில் ஆய்வாளர்கள் ரமேஷ் பிரபு, குமரகுரு, சூரியகலா, பாரதி உள்ளிட்ட போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.
இதையொட்டி, மத்திய பாதுகாப்பு படையினர், போலீஸாரும் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த சோதனையின் மூலம் அங்கித் திவாரி அறையில் இருந்து சில ஆவணங்களும், அவரது வீட்டில் நடந்த சோதனையில் லேப்-டாப் உள்ளிட்ட பொருட்களும் விசாரணைக்காக கைப்பற்றியதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.
இந்நிலையில், மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அலுவலகத்தில் பணிபுரியும் உதவி இயக்குநர் பிரிஜிஸ்ட் பெனிவால் என்பவர் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு 2ம்தேதி புகார் கடிதம் அனுப்பினார்.
இந்த நிலையில் மதுரை தல்லாக்குளம் காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரு புகார் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் தல்லாக்குளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags : மதுரையில் அமலாக்கத் துறைக்கு எதிராக காவல் நிலையத்தில் மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை புகார்.