சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு:  பென்னிக்ஸ் தாயாரிடம் விசாரணை

by Editor / 04-08-2021 06:11:18pm
 சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு:  பென்னிக்ஸ் தாயாரிடம் விசாரணை



சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு குறித்த விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், பென்னிக்ஸின் தாயாரிடம் சாட்சி விசாரணை நடைபெற்றது.
மதுரை: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்கிஸ் இருவரும் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் காவல் துறையினர் தாக்கி இருவரும் உயிரிழந்தனர்.இது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜ், காவலர்கள் செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ், சமயதுரை உள்ளிட்ட ஒன்பது பேர் மீது சிபிஐ தரப்பில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.


இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது வழக்கில் கைது செய்யப்பட்ட ஒன்பது காவலர்களும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அப்போது வழக்கின் முக்கிய சாட்சியான ஜெயராஜின் மனைவியும் பென்னிக்ஸ்சின் தாயாருமான செல்வராணி நீதிபதி முன்பாக சாட்சியம் அளித்தார்.முன்னதாக ஜூலை 9 ஆம் தேதி இவ்வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒன்பது பேரும் ஜூலை 28ஆம் தேதி மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் முன் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via