மக்களை தேடி மருத்துவம் மூலம் ஒரு கோடி பேருக்கு சிகிச்சை அளிக்க திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Admin / 05-08-2021 01:32:27pm
மக்களை தேடி மருத்துவம் மூலம் ஒரு கோடி பேருக்கு சிகிச்சை அளிக்க திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



மக்களை தேடி மருத்துவம் மூலம் ஒரு கோடி பேருக்கு சிகிச்சை அளிக்க திட்டம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொது மக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகளை வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கும் இத்திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த சாமனப்பள்ளி என்ற கிராமத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்த நிலையில் இத்திட்டம் தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
 
தொற்று அல்லாத நோய்களை கட்டுப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் இது சுகாதார ஆய்வாளர்கள், கிராமப்புற செவிலியர், பெண் சுகாதார தன்னார்வலர்கள் உள்ளிட்டவர்கள் மூலம் செயல்படுத்தப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உயர் ரத்த அழுத்தம், காசநோய், பல வகை புற்றுநோய்கள், நீரிழிவு, சிறுநீரக பிரச்னைகள் உள்ளிட்ட உடல் நல பிரச்னையுள்ளவர்கள் இத்திட்டத்தின் கீழ் பலன் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முதல் கட்டமாக நகரம் மற்றும் கிராமப்பகுதிகளை சேர்ந்த 20 லட்சம் பேர் பயனடையும் வகையில் தொடங்கப்படும் இந்த திட்டம், படிப்படியாக 1 கோடி பேரை சென்றடையும் வகையில் விரிவாக்கப்பட உள்ளது.
 
ஆண்டுதோறும் 257 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் சுமார் 25ஆயிரம் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் இந்த திட்டத்தில் பணியாற்ற உள்ளனர் என்றும் கர்ப்பிணி பெண்களூக்கு உட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 ஸ்டாலினின் 7 உறுதி மொழிகளில் அனைவருக்கும் நலவாழ்வு என்பது முக்கியமானது என கூறிய முதலமைச்சர் அனைவருக்கும் நலவாழ்வு என்பதை உறுதிப்படுத்தும் திட்டம் தான் மக்களை தேடி மருத்துவம் என்றார், தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் டயாலிசிஸ் சிகிச்சையை சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 

Tags :

Share via