மாணவிக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பிய 2 வாலிபர்கள் கைது

by Staff / 22-03-2024 12:54:16pm
மாணவிக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பிய 2 வாலிபர்கள் கைது

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து புகைப்படங்களை திருடி மார்பிங் செய்து, 12ம் வகுப்பு மாணவிக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கொத்தவால்சாவடி அண்ணா பிள்ளை தெருவை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, ஒரு செல்போன் எண்ணில் இருந்து, அவரது ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் வந்துள்ளது. மேலும், நாங்கள் சொல்வதை கேட்காவிட்டால், உனது ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவோம், என மிரட்டியுள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமி இதுகுறித்து தனது தாயிடம் கூறியுள்ளார். உடனே, மாணவியின் தாய் இதுகுறித்து முத்தியால்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், என்னுடைய மகள் 12ம் வகுப்பு படிப்பதால், படிப்புக்கு உதவியாக இருக்குமென்று அவருக்கு செல்போன் வாங்கி கொடுத்தோம். அந்த செல்போன் எண்ணில் ஆபாச வீடியோ, போட்டோக்களில் எனது மகளின் படங்களை சித்தரித்து அனுப்பியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில் மகளிர் போலீசார் அந்த செல்போன் எண்ணை சைபர் கிரைம் உதவியுடன் சோதனை செய்து பார்த்ததில், கொத்தவால்சாவடி அண்ணா பிள்ளை தெருவைச் சேர்ந்த ரவி (19), கிரண் சிங் (23) ஆகியோர் சிறுமிக்கு ஆபாச வீடியோ, புகைப்படங்களை சித்தரித்து அனுப்பியது தெரிய வந்தது.

 

Tags :

Share via