வேலுமணியை கைது செய்ய கைவிடச்சொல்லுங்கள் என்று கோரிக்கை

by Editor / 12-08-2021 12:52:34pm
வேலுமணியை கைது செய்ய கைவிடச்சொல்லுங்கள் என்று கோரிக்கை

ஜூலை 27ஆம் தேதி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் சிவி.சண்முகம், விஜயபாஸ்கர், வேலுமணி உட்பட 5 நபர்களைக் குறிவைத்து சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர், அந்தக் கூட்டத்தில் 5 டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டார்கள். அவர்களுக்கு முக்கியமான அசைன்மென்ட்களும் கொடுக்கப்பட்டது.

அதன்படி வேலுமணி மீதான வழக்குப் பதியும் பொறுப்பு லஞ்ச ஒழிப்புத்துறையிலேயே இருக்கும் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் எஸ்.பியாக இருப்பவர் பண்டித் கங்காதரர் ஐபிஎஸ்தான் வேலுமணி விவகாரத்தை கவனிக்க பணிக்கப்பட்டார்.

இந்த எஸ்.ஐ.சி கங்காதாரர்தான் முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது வழக்குப் பதிவு செய்து நேற்று, காலையில் 52 இடங்கள், பின் கூடுதலாக 8 இடங்கள் என 60 இடங்களில் ரெய்டு நடந்ததற்கு பொறுப்பாளர்.

முக்கிய வழக்குகள், உடனடி கைதுக்கான சாத்தியம் கொண்ட வழக்குகளைதான் இதுபோன்று சிறப்பு விசாரணை செல்லிடம் ஒப்படைப்பார்கள். அந்த வகையில்தான் வேலுமணி ரெய்டு விவகாரம் எஸ்.ஐ.சி.யிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனால் ரெய்டு முடிந்தவுடன் வேலுமணி கைது செய்யப்படுவார் என்பதுதான் லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரத்தின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.

நேற்று மாலை 4 மணி நிலவரப்படி வேலுமணியை கைது செய்து எங்கே அழைத்துப் போவது என்றும், எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் கீழே இருக்கும் கூட்டத்தை அப்புறப்படுத்துவது குறித்தும் போலீசில் ஆலோசனைகள் போய்க்கொண்டிருந்தன.

நிலைமையை அறிந்த முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் இருவரும் ஆலோசனைகள் செய்திருக்கிறார்கள். அதன் பின்னர் ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் ஸ்டாலினிடம் பேசியிருக்கிறார். இதன் பிறகே லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. கந்தசாமி கோட்டைக்கு அழைக்கப்பட்டார். அவருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

"மாலை வரை வேலுமணி கைது என்ற நிலையை மாற்றியவர் ஓபிஎஸ்தான் என்று சொல்லுகிறார்கள். அவர்தான் முதல்வர் ஸ்டாலினிடம் பேசி வேலுமணியைக் கைது செய்யும் நடவடிக்கையை கைவிடச்சொல்லுங்கள் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரத்தில் பேசியபோது, "வழக்கு பதிவுசெய்தாச்சு, ரெய்டும் செய்தாச்சு, இனிமேல் ஆதாரங்களை திரட்டி குற்றப் பத்திரிகையைச் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். ஆறு மாதத்துக்குள் இதெல்லாம் முடிந்துவிடும்" என்கிறார்கள்.

 

Tags :

Share via