சென்னையில் திறக்கப்பட உள்ள  சுதந்திர தின நினைவு தூண்

by Editor / 14-08-2021 07:51:28pm
சென்னையில் திறக்கப்பட உள்ள  சுதந்திர தின நினைவு தூண்

 

இந்தியா முழுவதும் 75வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 75 வது சுதந்திர கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாக சென்னை கடற்கரை சாலையில் சுதந்திர தின நினைவு தூண் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

சென்னை கடற்கரை சாலையில் காமராஜர் சாலை-சுவாமி சிவானந்தா சாலை சந்திப்பில் இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு பொதுப்பணித்துறை சார்பில் 55 அடி உயரத்தில் நினைவு தூண் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நினைவு தூணில் பஞ்சலோகத்தால் ஆன அசோக சக்கரம் மற்றும் 4 தலையுடன் கூடிய சிங்க முகம் செய்யப்பட்டு பொருத்தப்பட இருக்கிறது.
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் உலோக சிற்ப கலை கூடத்தில் பொதுப்பணித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிற்பகலைஞர் ரவீந்திரன் ஸ்தபதி தலைமையில் சுமார் 15க்கும் மேற்பட்ட உலோக சிற்ப கலைஞர்களின் கைவண்ணத்தில் கடந்த சில வாரங்களாக தயாராகி வருகிறது.
இதில் 4 தலையுடன் கூடிய சிங்க முகம் 5 அடி உயரத்திலும், அசோக சக்கரம் 8 அடி உயரத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை சுதந்திர நினைவு தூணில் பொருத்தப்பட்டு நாளை சுதந்திர தினத்தில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via