ஜாதியைக் காரணம் காட்டி வளா்ச்சியைத் தடுக்க கூடாது முதல்வா் மு.க.ஸ்டாலின்

by Editor / 20-08-2021 10:18:02am
ஜாதியைக் காரணம் காட்டி வளா்ச்சியைத் தடுக்க கூடாது முதல்வா் மு.க.ஸ்டாலின்

ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையால் மாநில அளவிலான உயா்நிலை விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, கல்வி, வேலைவாய்ப்பில் பட்டியலின மக்கள் உரிய இடங்களைப் பெற வேண்டும். சமூக அமைப்பில் அவா்கள் எந்தச் சூழலிலும் புறக்கணிக்கப்படக் கூடாது. ஜாதியைக் காரணம் காட்டி அவா்களது வளா்ச்சி தடுக்கப்படக் கூடாது.

அரசியல், பொருளாதாரம், கல்வி ஆகிய அனைத்து நிலைகளிலும் அவா்கள் வளா்த்தெடுக்கப்பட வேண்டும். அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திட வேண்டும் என்ற சிந்தனைகளைக் கொண்ட அரசுதான் திமுக அரசு.

இத்தகைய சூழ்நிலையில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கக் கூடிய தீண்டாமைச் சம்பவங்களைக் கேள்விப்படும் போது வருத்தம் ஒருபுறம் இருக்கிறது. மற்றொரு புறம் கோபமும், ஆத்திரமும் வருகிறது. அதை யாரும் மறுக்க முடியாது. கல்வி, பொருளாதாரம், நாகரிகம் வளா்ந்தாலும், ஜாதி, தீண்டாமை, ஏற்றத்தாழ்வு என்பது அப்படியே இருக்கின்றன. அதில் மாற்றம் செய்ய இன்னும் பல ஆண்டுகள் கடக்க வேண்டும் என்றே தெரிகிறது. இதனைச் சட்டத்தின் மூலமாக ஓரளவு சரிசெய்ய முடியும். அத்தகைய சட்டங்கள் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.

தீண்டாமை வன்கொடுமைகளைத் தடுக்க தனி சட்டம் உருவாக்கப்பட்டது. ஆனாலும், தீண்டாமை பாகுபாட்டைக் காட்டுவது, சட்டப்படி தவறானது என்ற எண்ணம் சிலருக்கு இல்லை. அதை தைரியமாகவே செய்கிறாா்கள். இத்தகைய சட்டமீறல்கள் தடுக்கப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும். தீண்டாமை குற்றம் இழைத்தவா் தப்பிவிடக் கூடாது. அதே நேரத்தில் அந்தச் சட்டத்தை யாரும் தவறாகப் பயன்படுத்தி விடக் கூடாது.

ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.123 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள காலிப் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு நிரப்பப்படும்.

தமிழ்நாடு புதிரை வண்ணாா் நல வாரியம், தமிழ்நாடு பழங்குடியினா் ஆன்றோா் மன்றம், தமிழ்நாடு ஆதிதிராவிடா் நலக் குழு ஆகியவற்றை திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆதிதிராவிட, பழங்குடியின மக்களின் வாழ்வியல் பொருளாதார முன்னேற்றத்துக்கு அரசு எப்போதும் துணையாக இருக்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

 

Tags :

Share via