வ.உ.சியின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடுங்கள்: மோடிக்கு ஏ.சி. சண்முகம் வேண்டுகோள்

by Editor / 04-09-2021 05:27:12pm
வ.உ.சியின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடுங்கள்: மோடிக்கு  ஏ.சி. சண்முகம் வேண்டுகோள்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் 150வது பிறந்தநாளையொட்டி அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஏ.சி. சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது சம்பந்தமாக புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘கண்ணீரும், செந்நீரும் சிந்தி நம் நாடு சுதந்திரம் அடைந்ததின் 75ஆம் ஆண்டு பவள விழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டில் மற்றொரு இனிய நிகழ்ச்சியாக கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 150 வது பிறந்த நாள் விழாவை நாளை (5ந் தேதி) சீரும், சிறப்புமாக எழுச்சியோடு கொண்டாட இருக்கிறோம். முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்நாளை ‘அரசு விழாவாக’ சட்டமன்றத்தில் அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளார். இதற்காக அவருக்கு புதிய நீதிக்கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வ.உ.சி. தேச விடுதலைப் போரில் தனது உடமைகள் அனைத்தையும் இழந்தார். எல்லோரும் வெள்ளையனை கண்டு அஞ்சியபோதும், அவர்களுக்கு எதிராக சுதேசி கப்பலை கடலில் செலுத்தியதன் விளைவாக இன்றும் ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று புகழப்படுகிறார். செல்வச் சீமான் குடும்பத்தில் பிறந்து மிகச்சிறந்த வழக்கறிஞராக புகழப்பட்ட இவர், விலங்கை போல் நெல்லை, பாளையங்கோட்டை சிறையில் செக்கு இழுக்க வைத்து, கொடுமைக்கு ஆளானார். வாழ்நாளின் இறுதி காலத்தில் அவரது மாசற்ற தேச சேவைக்கு வறுமையே பரிசாக இந்த தேசம் வழங்கியது.

மத்திய அரசு வ.உ.சியின் 150வது பிறந்தநாளை சிறப்பிகும் வகையில் அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட வேண்டும். மேலும் புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற வளாகத்தில் அவருக்கு முழு உருவச் சிலை அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை கேட்டுக் கொள்கிறேன்.

புதிய நீதிகட்சியின் சார்பில் மாநில, மண்டல, மாவட்ட ஒன்றிய, நகர, கிளை மற்றும் அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகளும் நாளை (5ந் தேதி) தமிழகம் முழுவதும் வ.உ.சி. திருவுருவச் சிலை மற்றும் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி மிகவும் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via