அனைவரின் ஆறுதல் வார்த்தைகள் தைரியம், நம்பிக்கையை கொடுத்தது: ஓ.பன்னீர்செல்வம்
மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு ஆறுதல் கூறிய அனைவரின் வார்த்தைகளுக்கு எனக்கு தைரியத்தையும், நம்பிக்கையையும் கொடுத்ததாக உணர்கிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இது குறித்து அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
என் அன்புக்குரிய மனைவி ப.விஜயலட்சுமி 1.9.-2021 அன்று காலை இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்தவுடன், நேரிலும், தொலைபேசி மூலமாகவும், கடிதங்கள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் வருத்தம் தெரிவித்து, ஆறுதல் கூறி, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த இந்திய துணை ஜனாதிபதி, பாரதப் பிரதமர், தமிழ்நாடு கவர்னர், தெலுங்கானா மாநில கவர்னர் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை கவர்னர், மணிப்பூர் கவர்னர், தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர், மத்திய அமைச்சர்கள், புதுச்சேரி யூனியன் பிரதேச முதலமைச்சர், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், அண்ணா தி.மு.க.வின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், திரைப்பட துறையினர், தொழிலதிபர்கள், பத்திரிகை மற்றும் ஊடகவியல் நண்பர்கள், அரசு உயர் அதிகாரிகள், காவல் துறை நண்பர்கள், மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இறைவனின் அருளும், அனைவரின் ஆறுதல் வார்த்தைகளும் எனக்கு தைரியத்தையும், நம்பிக்கையையும், சக்தியையும் கொடுத்ததாக நான் மனப்பூர்வமாக உணர்கிறேன். இதற்காக எனது கோடானு கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
Tags :