யானை பாகனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

by Staff / 28-10-2022 01:41:54pm
யானை பாகனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

நாகர்கோவில் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த யானை பாகனுக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இரணியலை சேர்ந்தவர் தனேஷ் (22), யானை பாகனாக பணியாற்றி வந்த இவருக்கு 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். தனேஷ் அவ்வப்போது சிறுமியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு அவர் சிறுமியை செல்போனில் பேசி அழைத்து கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி இந்த சம்பவம் தொடர்பாக குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூலியட் மற்றும் தலைமை காவலர் கவிதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தனேஷை கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கை நீதிபதி சசிரேகா விசாரித்து வந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

சிறுமியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அழைத்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், கடத்தி சென்ற குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் முத்து குமாரி ஆஜராகி வாதாடினார்.

 

Tags :

Share via