முதல் பட்டதாரி திட்டத்தில் முக்கிய மாற்றம்

by Editor / 08-09-2021 11:02:03pm
முதல் பட்டதாரி திட்டத்தில் முக்கிய மாற்றம்

சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவியர் கல்லூரிகளில் அதிக அளவில் சேர்ந்து கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் உயர் கல்வி பயின்றாலும் சலுகைகள் வழங்க வாய்ப்பு அளிக்கும் வகையில் முதல் தலைமுறை பட்டதாரி என கல்வி உதவித் தொகை திட்டம் மாற்றம் செய்யப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

259 கல்லூரி விடுதிகளில் ரூ.2.59 கோடி செலவில் செம்மொழி நூலகம் ஏற்படுத்தப்படும், இயக்கங்கள் மற்றும் மாவட்ட அலுவலகங்களுக்கு IFHRMS திட்டத்திற்காக ரூ.85.20 லட்சம் செலவில் கணினிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

கள்ளர் சீரமைப்பு பள்ளி கட்டடங்களில் ரூ.6 கோடி செலவில் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும், 15 கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 9ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தொடங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார்.

 

Tags :

Share via