ஹோட்டலை சூறையாடிய 2 போலீஸார் சஸ்பெண்ட்

by Editor / 09-09-2021 12:30:11pm
ஹோட்டலை சூறையாடிய 2 போலீஸார் சஸ்பெண்ட்

தஞ்சாவூர் ஆயுதப் படையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த இ.பி காலனியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்(45), திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த, தஞ்சாவூர் ஞானம் நகரைச் சேர்ந்த அருண்குமார்(30), தொல்காப்பியர் சதுக்கம் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் விஜி(35) ஆகியோர் கடந்த 6-ம் தேதி இரவு மது அருந்திவிட்டு, தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டனர்.

அப்போது, அவர்கள் ஆஃப் பாயில் ஆர்டர் செய்துள்ளனர். இரவு ஹோட்டலை மூடும் நேரம்நெருங்கியதுடன், வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர்களுக்கு ஆஃப் பாயில் வழங்க தாமதமானது. இதனால் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 3 பேரும், அங்கிருந்த ஹோட்டல் உரிமையாளர் ராம்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதுடன், நாற்காலிகளை எடுத்து வீசி,ஹோட்டலை அடித்து நொறுக்கினர். மேலும், அங்கிருந்த ராம்குமாரின் மகன் மீது சாம்பாரை கொட்டியதுடன், இதைக் கண்டித்த ராம்குமாரின் மனைவியையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர், அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது, விஜி காரை ரிவர்சில் எடுத்தபோது, கார் மோதியதில் அருண்குமார், பாலசுப்பிரமணியன் ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ராம்குமார் அளித்த புகாரின்பேரில், பாலசுப்பிரமணியன், அருண்குமார் ஆகியோரை தஞ்சாவூர் பல்கலைக்கழக போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விஜியைத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், பாலசுப்பிரமணியன், அருண்குமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்பி ரவளிப்ரியா நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டார்.

 

Tags :

Share via