உள்ளாட்சி தேர்தல் பதவிகளை ஏலம் விட்டால் நடவடிக்கை
ஊரக உள்ளாட்சித் தேர்தல் பதவிகளை ஏலம் விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
இதுசம்பந்தமாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிபேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் அறிவிக்கைகளையும், ஏனைய 28 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கான தற்செயல் தேர்தல் அறிவிக்கைகளையும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டதைத் தொடர்ந்து, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கு |5.9.2021 முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்கள் ஏலம் விடப்படுவதாக நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசியல் அமைப்பு சட்டத்திற்கும். மக்களாட்சி தத்துவத்திற்கும் புறம்பாக நடைபெறும் இத்தகைய செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி, தண்டனைக்குரியது என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பதவியிடங்கள் இவ்வாறு ஏலம் விடுவது மக்களின் உணர்வுகளுக்கு ஊறுவிளைவிக்கும் செயல் என்பதால் ஜனநாயகத்திற்கு ஊறுவிளைவிப்பதை தடுத்திட மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட நிருவாகம் சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுப்பதுடன் இத்தகைய நிகழ்வுகள் ஜனநாயகத்திற்கு எதிரானவை என்பதனை மக்கள் உணரச் செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாவண்ணம் தக்க முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணையிட்டுள்ளது.
மேலும், ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெருக்கப்படும் பிரதிநிதிகள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி கிராமப்புற மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பதவியிடங்கள் அனைத்தும் தேர்தல் மூலம் நிரப்பிட மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்’’.
இவ்வாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
Tags :