பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் பதவி விலகல் 

by Editor / 28-09-2021 04:02:49pm
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் பதவி விலகல் 

 

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் பதவி விலகியுள்ளார்.
பஞ்சாப் சட்டப்பேரவைக்கு இன்னும் 5 மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சித் தலைமை உத்தரவையேற்று அம்ரீந்தர் சிங் பதவியில் இருந்து விலகினார்.


இதனையடுத்து பசரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அம்ரீந்தர் சிங் பாஜகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகின. அவர் இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்கிறார். அப்போது பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழலில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் பதவி விலகியுள்ளார். சித்து கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.


அதில் அவர் "ஒரு மனிதனின் குணத்தின் சரிவு சமரசத்தில் இருந்து வருகிறது. பஞ்சாபின் எதிர்காலம் மற்றும் பஞ்சாபின் நலன் குறித்த விஷயத்தில் நான் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது. எனவே, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். காங்கிரஸுக்கு தொடர்ந்து சேவை செய்வேன்" என்று சித்து தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். எனினும், கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சமரசம் என்ன என்பது பற்றி அவர் விளக்கவில்லை.புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, நவ்ஜோத் சித்துவுக்கு நெருக்கமானவராக கூறப்படுகிறது. எனினும் பஞ்சாப் அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட சில முடிவுகளில் சித்துவிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை என கூறப்படுகிறது.


அவர் சூப்பர் முதல்வர் என்ற கூறப்பட்டாலும் உயர் நியமனங்களில் அவரது ஆலோசனை கோரப்படவில்லை என கூறப்படுகிறது. மூத்த வழக்கறிஞர் பஞசாப் மாநில அட்வகேட் ஜெனரலாக ஏ.பி.எஸ். தியோல் நியமனம் உள்ளிட்டவற்றில் சித்துவுக்கு அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via