கொளத்தூர் தொகுதியில் ரூ.98 லட்சம்  செலவில் கலையரங்கம், விளையாட்டுத் திடல், பூங்கா மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

by Editor / 06-10-2021 04:02:49pm
கொளத்தூர் தொகுதியில் ரூ.98 லட்சம்  செலவில் கலையரங்கம், விளையாட்டுத் திடல், பூங்கா மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

 


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.97.49 லட்சம் மதிப்பீட்டிலான கலையரங்கம், விளையாட்டு திடல் மற்றும் பூங்காவை  திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


மேலும், எவர்வின் பள்ளியில் தற்காலிகமாக செயல்படவுள்ள அரசு கலைக்கல்லூரிக்கான கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செம்பியம், ரங்கசாயி தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் ரூ.15.31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தை முதலமைச்சர் திறந்து வைத்து, பார்வையிட்டார். மேலும், மாணாக்கர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி, ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்து, பாராட்டினார்.


அடுத்து, செம்பியம், பார்த்தசாரதி தெருவில் ரூ.26.18 லட்சம் செலவில் சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், இறகு பந்து மைதானம் உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு திடலை முதலமைச்சர் திறந்து வைத்து, பார்வையிட்டார்.அதனைத்தொடர்ந்து, கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணப் பொருட்கள் மற்றும் கல்வி உதவித்தொகை, தொகுதி மக்களுக்கு மருத்துவ உதவித்தொகை, திருமண உதவித்தொகை, 3 சக்கர மோட்டார் வாகனங்கள், தள்ளுவண்டிகள், காதுகேட்கும் கருவிகள், மீன்பாடி வண்டிகள், என 48 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கொளத்தூர், எவர்வின் பள்ளியில் தற்காலிகமாக அமையவுள்ள அரசு கலைக் கல்லூரிக்கான கட்டிடங்களை முதலமைச்சர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.


பின்னர், திரு.வி.க. நகர், 5 -வது தெருவில் 7,500 சதுர அடி பரப்பளவில், ரூ.56 லட்சம் செலவில் செயற்கை நீரூற்று, சிறுவர் விளையாட்டு கருவிகள், யோகா கூடம், நடைபாதை வசதி உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மு. கருணாநிதி பூங்காவை முதலமைச்சர் திறந்து வைத்து, பார்வையிட்டார்.


இந்த நிகழ்ச்சிகளில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via