கோவில்களின்  வாடகை நிலுவைகளை பலகையில் எழுதி வைக்க வேண்டும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு

by Editor / 09-10-2021 03:51:48pm
கோவில்களின்  வாடகை நிலுவைகளை பலகையில் எழுதி வைக்க வேண்டும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் கோவில் சம்மந்தப்பட்ட சொத்து விவரம், வருவாய், வாடகை நிலுவைத்தொகை, பணியாளர்கள் எண்ணிக்கை, முக்கிய விழாக்கள் உள்பட பல்வேறு தகவல்கள் அடங்கிய பெயர்பலகை வெளித்தன்மையுடன் வைக்கப்பட வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சென்னை நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்தில் சென்னை மாவட்ட கோவில்களில் மேம்பாடு குறித்து இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், செயல் அலுவலர்கள் ஆகியோர்களுடன் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் அமைச்சர் பேசும் போது கூறியதாவது:


சென்னை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான 1206 திருக்கோவில்கள் உள்ளன. இத்திருக்கோவில்களில் திருப்பணி, திருத்தேர், திருக்குளம் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அலுவலர்களுக்கும் குறைந்தது 20 திருக்கோவில்கள் பொறுப்பு அலுவலர்களாக பணியில் உள்ளனர்.

அந்த பொறுப்பு அலுவலர்கள் ஒரு நாளைக்கு ஒரு கோவில் வீதம் ஆய்வுகளை மேற்கொண்டு அந்த ஆய்வின் அடிப்படையில் கோவில்களுக்குத் தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும். கோவில்களின் பணியாளர் பற்றாக்குறையை விரைவில் தீர்க்கப்படும். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் கோவில் சம்மந்தப்பட்ட சொத்து விவரம், வருவாய், வாடகை நிலுவைத்தொகை, பணியாளர்கள் எண்ணிக்கை, முக்கிய விழாக்கள் உள்பட பல்வேறு தகவல்கள் அடங்கிய பெயர்ப்பலகை வெளித்தன்மையுடன் வைக்கப்பட வேண்டும். சில கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் முக்கிய திருவிழாக்களுக்கு மட்டும் அவர்களை காணமுடிகிறது. மற்ற நாட்களில் ஒரு உதவியாளரை பணியில் அமர்த்தி கொள்கின்றனர். இது போன்ற நிலை மாற வேண்டும். குடமுழுக்கு நடைபெற தயாராக உள்ள கோவில்களில் விரைவில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.


இந்த ஆய்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர்கள் ஹரி பிரியா, ரோணுகா தேவி, காவேரி, புருசோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via