விவசாயிகள் கொலை வழக்கு: மத்திய அமைச்சர் மகன் ஆஷிஸ் மிஸ்ரா கைது

by Editor / 10-10-2021 04:27:49pm
விவசாயிகள் கொலை வழக்கு: மத்திய அமைச்சர் மகன் ஆஷிஸ் மிஸ்ரா கைது

லகிம் பூர் கேரியில் கடந்த ஞாயிறன்று நடந்த கலவரத்தில் 4 விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மத்திய அமைச்சர் அஜெய் மிஸ்ராவின் மகன் கைது செய்யப்பட்டார்.

அவர் 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

லகிம் பூர் கேரிக்கு வந்த மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை போராடிய விவசாயிகளுக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே மோதலில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.

இந்த விவகாரத்தில் உத்தரபிரதேச போலீசார் இதுவரை மத்திய அமைச்சர் மிஸ்ராவின் மகன் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்திய அமைச்சர் அஜெய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் அவர் நேரில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி போலீசார் முதல் சம்மன் அனுப்பினர்.

2வது சம்மன்

ஆனால், உடல்நிலை காரணமாகக் கூறி போலீசார் விசாரணைக்கு ஆஷிஸ் மிஸ்ரா ஆஜராகவில்லை. இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி நேற்று முன்தினம் 2-வது சம்மனை போலீசார் ஆஷிஸ் மிஸ்ராவின் வீட்டில் ஒட்டினர்.

மத்திய அமைச்சர் அஜெய் மிஸ்ரா நேற்று முன்தினம் இரவு சொந்த கிராமத்துக்குச் சென்றதால் அவரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா நேற்று போலீசார் விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 11 மணிக்கு ஆஷிஸ் மிஸ்ரா சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவர் போலீஸ் டி.ஐ.ஜி. உபேந்திர அகர்வால் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகினார்.

ஏறக்குறைய 11 மணிநேரம் லகிம் பூர் கேரி கலவரம் தொடர்பாக ஆஷிஸ் மிஸ்ராவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், போலீசார் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, ஆஷிஸ் மிஸ்ராவை போலீசார் நேற்று இரவு 11 மணி அளவில் கைது செய்தனர். அவரை நீதிபதியின் வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு எடுக்க போலீசார் கோரினர்.

ஆனால், திங்கள்கிழமை வரை ஆஷிஸ் மிஸ்ரா நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

போலீஸ் டிஐஜி உபேந்திர அகர்வால் நிருபர்களிடம் கூறுகையில், “லகிம் பூர் கலவரம் தொடர்பாக ஆஷிஸ் மிஸ்ராவிடம் விசாரணை நடத்தினோம். ஆனால், அவர் எதற்கும் ஒத்துழைப்பு தரவில்லை. ஆதலால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்குக் கோரினோம், ஆனால், திங்கள்கிழமைவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.

ஆஷிஸ் மிஸ்ரா விசாரணைக்கு வருவதையடுத்து, லக்கிம்பூர் குற்றவியல் பிரிவு அலுவலகத்தில் கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. சிறப்பு விசாரணைக் குழு ஆஷிஸ் மிஸ்ராவிடம் விசாரணை நடத்தும்போது மத்திய அமைச்சர் அஜெய் மிஸ்ரா லக்கிம்பூர் நகரில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் தனது ஆதரவாளர்கள், வழக்கறிஞர்களுடன் அமர்ந்திருந்தார். அப்போது ஆஷிஸ்மிஸ்ரா அப்பாவி, நிரபராதி என அமைச்சரின் ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.லக்கிம்பூர் கலவரம் தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், “இந்த வழக்கில் உ.பி. அரசும், போலீசாரும் எடுத்த நடவடிக்கைகள் மனநிறைவாக இல்லை. யார் தவறு செய்திருந்தாலும் சட்டப்படிநடவடிக்கை எடுங்கள், நீங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டம் கடமையைச் செய்யும்” என எச்சரித்திருந்தது. இதையடுத்து, மத்திய அமைச்சர் அஜெய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்

இதையடுத்து, நேற்று (சனிக்கிழமை) இரவு அஜய் மிஸ்ரா நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து அஜய் மிஸ்ராவை 14 நாள் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Tags :

Share via