சசிகலா கடிதம்; தலைவர்கள் கலக்கம்

by Editor / 19-10-2021 03:02:43pm
சசிகலா கடிதம்; தலைவர்கள் கலக்கம்


சசிகலா எழுதியுள்ள கடிதம் அதிமுக தலைவர்களை கலக்கம் அடைய செய்துள்ளது
 சசிகலாதனது ஆதரவாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதன் விவரம் வருமாறு ,, ``நிறை அன்புடைய சகோதரர்களே சகோதரிகளே.. கழகத்தின் பேரன்பு தொண்டர்களே அனைவருக்கும் வணக்கம்...! இன்றைய தொடக்கம் ஓர் இனிய தொடக்கம் ஆகட்டும். நாளைய நாள் நமக்காகட்டும். நம் நற்பணிகளால் தமிழ் சமூகம் மீள் உயிர் பெறட்டும். இதற்கான வெற்றி இலக்கு நோக்கி நம் கழகத்தை இயக்குவோம்.


அண்ணா கண்ட வழியில்... புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் கொண்ட கொள்கைகளை பின்பற்றி.. ஆளுமையால், ஆட்சி சிறப்பால் மக்கள் மனம் வென்ற நம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பயணித்த நீண்ட பாதையை நெஞ்சில் கொண்டு கழகம் காப்போம். கரம் கோர்ப்போம்.. பகை வெல்வோம்.. ஒற்றுமை பூக்களை ஒன்றாய் குவிப்போம்.
தமிழ் சமூகத்தின் ஏற்றம் ஒன்றே நம் எண்ணம் என்று மக்களுக்கு உரைப்போம். புறப்படுங்கள்.. புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா? பொறுத்தல் தகுமா?
மக்கள் தந்த மாபெரும் வெற்றியால் ஆ.இ.அ.தி.மு.க நாடாண்டதையும் அது ஆற்றிய நற்பணிகளையும் சரித்திரம் சொல்லும். நமக்கான புரிதலில் நிலவிய சிக்கலால் எதிரிக்கு இடம் கொடுத்து விட்டோமே... சிந்தியுங்கள்! எத்தனை எத்தனை இன்னல்களை கடந்த புரட்சித்தலைவி அம்மா சென்ற வழியில் தடையின்றி செல்ல உறுதி கொள்வோம்.

நீங்கள் நினைப்பது புரிகிறது.. தொண்டர்களே உங்கள் தூய நெஞ்சம் புரிகிறது. கழகம் காக்கப்படும்.. மக்கள் ஒற்றுமை உயிர்பெறும். காலத்திற்காய் காத்திருப்பவன் ஏமாளி.. காலத்தை கைப்பற்றுபவன் புத்திசாலி. அம்மாவின் பிள்ளைகளான நாம் புத்திசாலிகளன்றோ? கரம் கோர்ப்போம்.. அம்பாய் பயணிப்போம். இலக்குகளை தொடுவோம். அயராது உழைக்க மனம் கொள்வோம்.


எதிர்காலத்தை நாம் கழகத்தின் கையில் கொண்டு வர சூளுரைப்போம். அஞ்சாது உறுதி ஏற்போம். மக்களுக்காய் நாம் இருப்போம். நமக்காக மக்கள் இருப்பார்கள். கழகத்தின் பாதையில் புரட்சித்தலைவர் காணாத சோதனையா? புரட்சித்தலைவி அம்மா காணாத இடர்பாடா? அத்தனை தடைகளையும் உடைத்து அவர்கள் கழகம் காத்த காலத்தை நாம் அறிவோம்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இது நாம் அறிந்ததுதானே. வெல்வோம் சகோதரர்களே.. நான் இருக்கிறேன் என்பதை விட நாம் இருக்கிறோம். ஆதிக்கம் ஒருநாள் மக்களிடம் மண்டியிடும். அம்மா பாதையில் மக்கள் மனம் வெல்வோம். ஒன்று படுவோம் வென்று காட்டுவோம். தலைவர் புகழ் ஓங்கட்டும்...

தலைவி புகழ் நிலைக்கட்டும்...பொன்விழா பிறக்கும் இந்த நாள் கழகத்தின் வரலாற்றில் புது நாள் ஆகட்டும். தலைவரின் எத்தனை எத்தனை திட்டங்களால் சமூகம் எழுச்சி கண்டது? தலைவியின் எத்தனை எத்தனை செயல்பாடுகளால் மக்கள் வாழ்வை மாற்றிக் காட்டின? தலைவர்கள் காட்டிய பாதையில் தொய்வில்லாமல் மக்களுக்காக பயணிப்போம். சங்கமிப்போம் சாதிப்போம்.ழகம் நஞ்சாவதை ஒரு நொடியும் பொறுக்காது. தொடர்வோம் வெற்றி பயணத்தை, தொண்டர்களின் துணையோடும் மக்கள் பேராதரவோடும்.. மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம்.

புரட்சித்தலைவர் நாமம் வாழ்க.. புரட்சித் தலைவி அம்மா நாமம் வாழ்க... வாழ்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்... வளர்க தமிழகம்! நன்றி வணக்கம்!"- என்றும் அம்மா வழியில் வி. கே சசிகலா,.கழக பொதுச்செயலாளர் ஆஇஅதிமுக.கழக பொதுச்செயலாளர் என மீண்டும் குறிப்பிட்டுள்ள சசிகலாவின் இந்த மடல், அதிமுக வினர் இடையே கலகத்தை ஏற்படுத்தியுள்ளது

 

Tags :

Share via