ரூ.1259 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலைய பணிகள்: ஸ்டாலின் நேரில் ஆய்வு

by Editor / 19-10-2021 03:05:57pm
ரூ.1259 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும்  நிலைய பணிகள்: ஸ்டாலின் நேரில் ஆய்வு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கிழக்கு கடற்கரை சாலை, நெம்மேலியில் செயல்பட்டு வரும் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் மற்றும் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


சென்னைக்கு அருகே வற்றாத நீராதாரங்கள் இல்லாத காரணத்தினால் சென்னை பெருநகரம் வடகிழக்கு பருவ மழையை பெரிதும் சார்ந்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை பொய்க்கும் காலங்களில் நகரின் நீண்ட கால குடிநீர் தேவை மற்றும் மக்களின் அன்றாட குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை அமைத்துள்ளது. கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள், சென்னை மாநகரின் குடிநீர் தேவைகளை நிறைவு செய்வதில் பெரும்பங்காற்றி வருகின்றன.
தமிழ்நாட்டில் மீஞ்சூரில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் முதல் நிலையம் கருணாநிதியால் 2010 ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.


இரண்டாவது நிலையமாக நெம்மேலியில் 805 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அன்றைய துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் 23.2.2010 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, 2013 ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது.


 நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட இக்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இந்த நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தென்சென்னையில் அமைந்துள்ள வேளச்சேரி, பள்ளிப்பட்டு, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளாகத்தைச் சார்ந்துள்ள பகுதிகளுக்கு குழாய் கட்டமைப்புகள் மற்றும் நீரேற்று நிலையங்கள் வாயிலாக மக்களுக்கு வழங்கப்பட்டு, சுமார் 10 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.


அதனைத் தொடர்ந்து, நெம்மேலியில் 1259 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்காக நடைபெற்று வரும், கடல் நீரை உள் வாங்கும் ஆழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (Intake Sump), சுத்திகரிக்கப்பட்ட நீர்தேக்க தொட்டி, சுத்திகரிக்கப்பட்ட நீர் உந்து நிலையம், வடிகட்டப்பட்ட கடல் நீர்தேக்கத் தொட்டி மற்றும் உந்து நிலையம், காற்றழுத்தம் மூலம் எண்ணெய் மற்றும் கசடுகளை அகற்றும் தொட்டி, நுண் வடிகட்டி மற்றும் எதிர்மறை சவ்வூடு பரவல் நிலையம், நிர்வாகக் கட்டடம், கசடுகளை கெட்டிப்படுத்தும் பிரிவு, செதிலடுக்கு வடிகட்டி போன்ற கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்து, இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ள ஏப்ரல் 2023-க்குள் முழுமையாக முடித்திட அலுவலர்களை அறிவுறுத்தினார்.


மேலும், இத்திட்டத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்திலிருந்து பல்லாவரம் வரை குழாய் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் முட்டுக்காடு பகுதியில் நடைபெற்று வரும் குழாய் பதிக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இத்திட்டத்தின் வாயிலாகப் பெறப்படும் குடிநீர் மூலம், தென்சென்னைப் பகுதிகளான உள்ளகரம், -புழுதிவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், புனித தோமையார் மலை, பல்லாவரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப வழித்தடப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 9 லட்சம் மக்கள் பயனடைவர்.

 

Tags :

Share via