ஷாருக்கான் வீட்டில் போதை மருந்து சோதனை :சிறையில் மகனை சந்தித்தார்

by Editor / 21-10-2021 03:27:28pm
ஷாருக்கான் வீட்டில் போதை மருந்து சோதனை :சிறையில் மகனை சந்தித்தார்

மும்பை மன்னத் பகுதியில் உள்ள நடிகர் ஷாருக்கான் வீட்டிலும், இந்தி நடிகை அனன்யா பாண்டே வீட்டிலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.


ஏற்கனவே ஷாருக்கானின் மகனுக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்பிருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கோர்ட்டில் தெரிவித்திருந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் சிறையில் இருக்கும் தனது மகனை நடிகர் ஷாருக்கான் ஆர்தர் ரோடு சிறைக்குச் சென்று பார்த்தார்.


கடந்த 3 ம் தேதி ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக தன் மகனை நேரில் சந்தித்து பேசினார். சுமார் 10 நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தார்.அப்போது அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது. அதைத் துடைத்துக் கொண்டே, ‘‘தைரியமாக இரு’’ என்று ஆர்யன்கானிடம் ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பு மிகவும் உருக்கமானதாக இருந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கடந்த 3-ந்தேதி சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது கூட்டாளிகள் 7 பேரும் பிடிபட்டனர். அவர்களை கைது செய்த போதை தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


சிறைக்குள் ஆர்யன்கான் மற்ற குற்றவாளிகளுடன் சேர்த்து அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த அவரது கை செலவுக்காக ரூ.4 ஆயிரத்து 500-ஐ நடிகர் ஷாருக்கான் அனுப்பி இருந்தார். மேலும் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரி கான் இருவரும் ஆர்யன் கானுடன் வீடியோ கால் மூலமாக பேசியிருந்தனர்.ஆர்யன்கானை ஜாமீனில் எடுப்பதற்காக நடிகர் ஷாருக்கான் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு இருந்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்க சிறப்பு கோர்ட்டு மறுத்துவிட்டது. வாட்ஸ்அப் தகவல்களில் ஆர்யன்கான் முதன்மை குற்றவாளி என்பதற்கு ஆதாரம் இருப்பதாக கூறி அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து ஆர்யன்கான் மும்பை ஐகோர்ட்டில் தன்னை விடுதலை செய்யக்கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது ஆர்யன்கான் விடுதலை ஆவாரா? என்பது தெரியவரும்.ஆர்யன்கானுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால் அவரை அவரது குடும்பத்தினர் சந்தித்து பேச அனுமதி வழங்கப்படுவதாக மும்பை ஆர்தர் ஜெயில் நிர்வாகம் நேற்று அறிவித்தது. ஆர்யன்கான் வெளியில் இருந்து சட்ட விதிக்கு உட்பட்டு உதவிகளை பெறலாம் என்றும் சிறைத்துறை கூறி இருந்தது.இதன் காரணமாக நடிகர் ஷாருக்கான் மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறைச்சாலைக்கு சென்றார்.

 

Tags :

Share via