எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு ‘நெக்ஸ்ட்’ தகுதி தேர்வு கூடாது: அமைச்சர்

by Staff / 08-07-2023 04:39:36pm
எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு ‘நெக்ஸ்ட்’ தகுதி தேர்வு கூடாது: அமைச்சர் எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு ‘நெக்ஸ்ட்’ தகுதித் தேர்வை கைவிடுமாறு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை வரும் 14-ம் தேதி நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். எம்பிபிஎஸ் இறுதியாண்டு தேர்வு, முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கான தகுதித் தேர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து ‘நெக்ஸ்ட்’ எனப்படும் தேசிய தகுதித் தேர்வை நடத்த தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதாவது எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவர்கள் நெக்ஸ்ட்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பயிற்சி மருத்துவராகப் பணியாற்ற முடியும். நெக்ஸ்ட்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றால் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேரவும், மருத்துவ சேவைகளை ஆற்றவும் முடியும். அதேபோன்று வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோர் இந்தியாவில் மருத்துவ சேவையாற்றவும் அத்தேர்வு கட்டாயமாக்கப்பட உள்ளது. இந்த தேர்வு முறையால் மாணவர்களின் பயிற்சித் திறன் பாதிக்கப்படும். எனவே இத்திட்டத்தைக் கைவிடுமாறு, பிரதமர் மோடிக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதினார். இந்நிலையில், அடுத்தகட்டமாக மத்திய அரசிடம் தமிழகம் சார்பில் நேரில் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது: மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் கூட்டம் வரும் 14, 15-ம் தேதிகளில் உத்தராகண்ட் மாநிலம், டேராடூனில் நடைபெற உள்ளது. தமிழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை அப்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் முன்வைக்க உள்ளோம். குறிப்பாக ‘நெக்ஸ்ட்’ தேர்வு முறையை அமல்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்த இருக்கிறோம். அதேபோன்று நீட் தேர்வுவிலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளையும் தெரிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
 

Tags :

Share via