முதுமையைப் பேணுங்கள்
முப்பது – நாற்பது ஆண்டுகாலம் குடும்பத்திற்காக உழைத்து ஓய்வு பெற்றிருக்கும் முதுமை பருவம் அடைந்தவர்களை அன்புடன் அனுசரணையுடனும் கண்ணியமாக நடத்திடவும் அக்கறை எடுத்துக் கொள்ளவும் குடும்ப உறுப்பினர்கள் மனதை வளப்படுத்திக் கொள்ளவேண்டும்.
இன்றைக்கு அனுபவிக்கும் அத்துணையும் அவர்களால் நமக்கு வழங்கப்பட்டது என்ற எண்ணம் மகன் – மகளுக்கு, மருமகளுக்கு ஏற்படவேண்டுத். படிப்பால், உடல் உழைப்பால் குடும்பத்தின் தேவைக்காக உழைத்த மனிதர் நம்மோடு வீட்டில் ஓய்வில் இருக்கிறார் என்பதே சந்தோஷம்…
நேரம் காலம் பாராமல் பிள்ளைகளின் படிப்பு – வேலை – கல்யாணம் என்று தம் சந்தோஷங்களை எல்லாம் குடும்பத்திற்காக வார்த்தவர்கள். வருமானமின்றி வீட்டில் இருக்கிறார் என்பதற்காக மரியாதை குறைவாக நடத்த முயலக்கூடாது…
பணம், குடும்ப வருவாய் முடிந்தளவு சம்பாதிக்கப்பட்டு இன்று குடும்பம் நிமிர்ந்திருக்கிறது என்றால் அது அவரால்தானே சாத்தியமானது. வெறும் படிப்போட வாழ்க்கையைத் தொடங்கியிருப்பார்…
இன்றைக்கு அவர் நினைத்துப் பார்க்கும் பொழுது இந்த வாழ்க்கை ஆரம்பிக்கையில் நம்மிடம் என்ன இருந்தது… வெறும் படிப்பும் அது தந்த வேலை மட்டும் தானே…? பூஜ்யத்திலிருந்து தொடங்கிய வாழ்வு இன்றைக்கு மன நிறைவை – திருப்தியைத் தரத்தக்கதாக மாறியிருக்கிறது என்று நினைக்கத் தோன்றும். ஆனால், பிள்ளைகளோ… அவர் பெற்ற பணத்தை குறி வைத்தே பாசம் காட்டினால் அது அவருக்குச் செய்யும் பச்சைத் துரோகமாக அமையும்.
முதுமை, இயல்பானது ஒவ்வொரு மனிதருக்கும் அவர் விரும்பியோ விரும்பாமலோ வரக்கூடியது. இதை யாரும் தவிர்க்கவோ தள்ளவோ முடியாது.. அந்தப் பருவத்தை அடைந்தே தீரவேண்டும் இது இயற்கை விதி.
தாலி கட்டிய மனைவி கூட – பிள்ளைகளோடு சேர்த்து மரியாதை குறைவாக நடத்துகிற போக்கு இன்றைக்கு பலவீடுகளில் அரங்கேறுகிறது. சொத்துக்காக பெற்ற பிள்ளைகளே பெற்றோரை அடித்துத் துன்புறுத்துகிற நிலையும் நிலவுகிறது… மனைவியின் பேச்சு கேட்டு பெற்ற பிள்ளையே தாயை நடுரோட்டில் தவிக்க விட்டு போன கதையும் அறிவோம்… தரதரவென்று தகப்பனாரை ரோட்டிலே இழுத்துப்போட்டு சொத்தை அடைய நினைத்த மகளையும் மாப்பிள்ளையும் காலம் காட்டியது.
முதிர்ந்த வயது, தகப்பன் உறவு என்பதெல்லாம் பண – சொத்தாகையில் மூலம் நிர்மூலமாகிப் போனது. மாரிலும் தோளிலும் சுமந்து வளர்த்தவர்கள் – பத்து மாதம் சுமந்து பெற்றவர்களை காசு பணத்திற்காக நிராதாரவாக விடுகிற அவலம் மனித சமூகத்தின் கேவலம்…
முதியோர் இல்லங்கள் ஊருக்கு ஊர் பெருகிவிட்டன… மென்பொருள் நிறுவன வேலைக்குச் சென்றவர்கள் தனித்திருக்கும் தாய் மீது கவனமின்றி… வருடகணக்காக இருந்த கொடூரம்… தாய் என்ன ஆனாள் என்பது குறித்து சற்று சிந்திக்காத பணம்தேடிப்போன மனிதர்கள்… ஊர்திரும்பி வருகையில் தாயின் எலும்புக்கூட்டை தரிசித்த துர்பாக்கியம்…
அந்தப் பிள்ளை காப்பாற்றுவான் இந்தப் பிள்ளை அரவணைப்பான் என்பதெல்லாம் காற்றில் எழுதிய எழுத்தாகிப் போனது… அவரவர் வாழ்க்கை அவரவர் குடும்பம் என்கிற எண்ணம் வலுத்ததால் உறவுகள் மீதுள்ள உழை – அக்கறை, பாசம் எல்லாம் ஒன்றுமில்லாததாகிப் போனது. பெற்ற பிள்ளைகள் உயர்ந்து உன்னதமாக வாழ வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு தம் இறுதி காலத்தில் ஏமாற்றத்தையே பெரும்பான்மை பிள்ளைகள் கொடுக்கின்றனர்…
நமக்காக உழைத்த மாடுகள் வலுவிழந்த போதும்… தாய் மடியாகப் பால் சுரந்த பசு, பால் நிறுத்தியவுடன் மலட்டுப் பசு தேவையில்லை என்று கசாப்புச் கடைக்கு விற்கும் மனித சமூகத்திலிருந்து வந்தவர்கள் தானே நலம்…
பலன் பார்த்துதான், பொருள் முதல்வாதக் கொள்கையில் இயங்கும் உலகமாயிற்று… எது கொடுத்தால் எதைப் பெறலாம் என்கிற புத்தியே – செழித்து வளர்ந்து விட்டது.
இன்று நாம் நம் பெற்றோர்களைப் புறக்கணிப்பதை மௌனமாக இருந்து வேடிக்கைப் பார்க்கும் நம் பிள்ளைகளை நாளை நம்மையும் அதுபோல செய்யமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்… நாம் தான் குருவாக இருந்து தவறான பாடத்தை அவனுக்குப் போதிக்கிறோமே….
கூடுமான வரை நம் பெற்றோர்களை முதுமை வயதில் பணமில்லை என்பதற்காகவோ… பணம் உதாசீனம் செய்யாதீர்கள்… அவர்கள் உயிருள்ள மனிதர்கள்…
Tags :