மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் முற்றுகை

by Editor / 15-11-2021 03:58:55pm
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் முற்றுகை

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கல்லூரி மாணவ-மாணவிகளின் தர்ணா போராட்டம் காரணமாக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆன்-லைன் வகுப்புகள் நடந்து வந்தன. இதனால் தேர்வுகளும் ஆன்-லைன் மூலம் மாணவ-மாணவிகள் எழுதி வந்தனர்.
 
இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்து விட்டதால் தமிழகம் முழுவதிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.

மதுரை மாவட்டத்திலும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாணவ-மாணவிகள் நேரடியாக பங்கேற்று வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் செமஸ்டர் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு நேரடியாக வந்து தேர்வு எழுத வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இன்று தேர்வு தொடங்கும் நிலையில் தனியார் கல்லூரியின் இந்த அறிவிப்புக்கு மாணவ-மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்த கல்லூரியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இன்று காலை மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் ஆன்-லைன் வாயிலாக தேர்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கல்லூரி மாணவ-மாணவிகளின் தர்ணா போராட்டம் காரணமாக அங்கு ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) மனுநீதி நாள் என்பதால் மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுப்பதற்காக ஏராளமானோர் வந்திருந்தனர்.

இந்த நிலையில் மாணவ-மாணவிகளின் முற்றுகை போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் முழுவதும் கூட்ட நெரிசலாக காணப்பட்டது.

இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மாணவ-மாணவிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் இன்று நடப்பதாக வெளியிடப்பட்ட செமஸ்டர் தேர்வு அட்டவணைகள் 2 வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும் கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 2 மணி நேரம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நிலவி வந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

 

Tags :

Share via