கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்றாதவர்கள் மீது கட்டாயம் அபராதம் விதிக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

by Admin / 03-01-2022 02:39:24pm
கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்றாதவர்கள் மீது கட்டாயம் அபராதம் விதிக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும் அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், 

தமிழக அரசு அறிவித்து இருக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்றாதவர்கள் மீது கட்டாயம் அபராதம் விதிக்க வேண்டும் எனவும் இரண்டாம் தவணை வந்தும் தடுப்பூசி செலுத்தாத நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

அதேபோல் 15 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி செலுத்தப்படுவதால் அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும், குறிப்பாக அவசியம் இல்லாமல் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். 

சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.

 
மேலும் 1 புள்ளி 15 லட்சம் படுக்கைகள் தமிழகத்தில் தயாராக உள்ள நிலையில் கூடுதலாக 50 ஆயிரம் படுக்கைகள் ஏற்படுத்தவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளர். தொற்று அதிகம் கண்டறிந்து வரப்படும் மாவட்டங்களில் தீவிர கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்,  அதே போன்று மற்ற மாவட்டங்களிலும் அஜாக்கிரதையுடன் இல்லாமல் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via