சபரிமலையில் மகர விளக்கு தரிசனம்
சபரிமலையில் ஆண்டுதோறும் மகரவிளக்கு மண்டலபூஜைகள் நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டு மகர விளக்கு பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் அடங்கிய 3 பெட்டிகள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து பக்தர்களின் சரண கோஷம் முழங்க ஆபரண பெட்டிகள் இன்று மாலை 6.20 மணியளவில் சபரிமலை சன்னிதானம் கொண்டு வரப்பட்டது. அங்கு திருவாபரண பெட்டிகளுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் பின்னர், பதினெட்டாம் படி வழியாக கொண்டு செல்லப்பட்ட திருவாபரணபெட்டிகளை தந்திரியும், மேல்சாந்தியும் பெற்றுக்கொண்டனர். பின்னர் அந்த ஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டன. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனைக்கு பிறகு பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி காட்சி அளித்தது. மூன்று முறை தொடர்ந்து மகர ஜோதியை பல இலட்சம் பக்தர்கள் தரிசித்தனர். அப்போது சுவாமியே சரணம் ஐயப்பா சரண கோஷங்கள் எழுப்பி பக்தி பரவசம் அடைந்தனர்.
Tags :