சுனாமி பேரலையில் 9 மாத குழந்தையாக மீட்கப்பட்டு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆதரவில் வளர்ந்த பெண்ணுக்கு திருமணம்

by Editor / 07-02-2022 09:11:30am
சுனாமி பேரலையில் 9 மாத குழந்தையாக மீட்கப்பட்டு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆதரவில் வளர்ந்த பெண்ணுக்கு திருமணம்

 2004ம் ஆண்டு உலகில் ஏற்பட்ட ஆழிபேரலையில் 9 மாத குழந்தையாக மீட்கப்பட்டு தமிழக  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆதரவில் வளர்ந்த சவுமியாவிற்கு  நாகையில் நேற்று நடந்த திருமணம் நடந்தது.

 தமிழகத்தில்  கடந்த 2004ம் ஆண்டு  சுனாமி பேரலையின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் பலியாயினர்.இதில் நாகை  மாவட்டத்தில் மட்டும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பில்  பெற்றோர்களை ஏராளமான குழந்தைகள் இழந்தனர். அப்போது அரசால் அன்னை சத்யா  இல்லம் என்பது தொடங்கப்பட்டு பெற்றோரை இழந்த 99 குழந்தைகள்  தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டனர். அதில் 9 மாத குழந்தையான சவுமியா, 3  மாத குழந்தையான மீனா ஆகிய இரண்டு பச்சிளம் குழந்தைகளை அப்போதைய  நாகப்பட்டிணம் ஆட்சியராக  இருந்த ராதாகிருஷ்ணன் தத்தெடுத்து வளர்த்தார்.

பல்வேறு  இடங்களுக்கு பணி மாறுதலில் ராதாகிருஷ்ணன் சென்றாலும் நாகைக்கு வந்து  குழந்தைகளோடு நேரங்களை செலவிட்டு அவர்களது கல்வி வளர்ச்சி மட்டும் இன்றி  அவர்களது வளர்ச்சிக்கும் அதிக பங்களிப்பை செலுத்தி பராமரித்து வந்தார்.  இந்நிலையில் சவுமியா மற்றும் மீனா ஆகிய இரண்டு பேரும் 18 வயதை கடந்த  பின்னர் நாகை புதிய கடற்கரை சாலையில் வசிக்கும் மலர்விழி மற்றும் மணிவண்ணன்  தம்பதியினர் இரண்டு பேரையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

இதையடுத்து  சவுமியாவிற்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. நேற்று  நாகை  ஆபீசர்ஸ் கிளப்பில் திருமணம் நடந்தது. சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன் திருமணத்திற்கு தலைமை வகித்தார். கலெக்டர் அருண்தம்புராஜ்,   எஸ்பி ஜவஹர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சுகாதாரத்துறை செயலாளர் ஆதரவில்  வளர்ந்த தனக்கு திருமணம் நடந்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சவுமியா  கூறினார்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: சுனாமி  பேரலையின் போது விவரம் தெரிந்த பல குழந்தைகள் பெற்றோரை இழந்த நிலையில்  மீட்க பட்டாலும், சொந்தம் பந்தம் என எதுவும் அறியாத பச்சிளம் குழந்தைகளாக  சவுமியா மற்றும் மீனா ஆகியோரை மீட்டு எடுத்தோம். இப்போது சவுமியா  வளர்ந்து திருமணம் நடைபெற்றுள்ளது. மலர்விழி, மணிவண்ணன் தம்பதியினர்  பாதுகாவலராக சவுமியாவை வளர்த்தாலும் பெற்ற மகளை போல் சவுமியாவிற்கு  திருமணம் செய்து வைத்துள்ளனர். இதை பார்க்கும் போது மனிதநேயம் மட்டும்தான்  இதுநாள் வரை நிலைத்து நிற்கிறது என்றார்.


 

 

Tags : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆதரவில் வளர்ந்த பெண்ணுக்கு திருமணம்

Share via