புத்தாடை வாங்குவதற்கு பணம் தராததால் சிறுமி தூக்கிட்டு தற்கொலை

by Admin / 08-02-2022 01:29:30pm
புத்தாடை வாங்குவதற்கு பணம் தராததால் சிறுமி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பெருமாள்மலை அடிவாரத்தில் வசிப்பவர் சத்யா. இவருடைய முதல் கணவர் மாணிக்கம். இவர்களுக்கு லோகநாயகி மற்றும் தர்ஷினி(வயது 15)  என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
 
7 ஆண்டுகளுக்கு முன்னர் மாணிக்கம் இறந்து விட்டார். இதையடுத்து செந்தில்குமார் என்பவரை சத்யா 2&வது திருமணம்செய்து கொண்டார். இவர்களுக்கு லக்சன்(6) என்ற ஆண் குழ்தை உள்ளது.

லோகநாயகிக்கு திருமணமாகி குழந்தை பிறந்திருந்தது. அந்த குழந்தைக்கு புதிய ஆடை வாங்குவதற்காக தர்ஷினி தனது தாயாரிடம் பணம் கேட்டதாகவும், அதற்கு வேலைக்கு போய்வந்து தருவதாக அவர் கூறியதாக தெரிகிறது

இந்நிலையில் சம்பவத்தன்று சத்யா தனது இரண்டாவது கணவரான செந்தில்குமார் மற்றும் மகன் லக்சன் ஆகிய மூவரும் சொந்த வேலை காரணமாக வெளியில் செல்வதாகவும், வாடிக்கையாக பூக்களை கட்டித்தரும் கடைக்கு பூக்களைக் கட்டி கொடுத்து விடுமாறு தர்ஷினியிடம் கூறி விட்டு வெளியில் சென்று உள்ளனர். 

இதனையடுத்து கடைக்காரர் சத்யாவிற்கு போன் செய்து, இதுவரை தங்கள் மகள் பூக்களை கட்டி கடைக்கு அனுப்பவில்லை என கூறியதன் பேரில், சத்யா தனது பக்கத்து வீட்டுக்காரருக்கு போன் செய்து தர்ஷினியை பூக்களை விரைவாக கட்டி கடைக்கு அனுப்பி வைக்க கூறியுள்ளார். 

இதனையடுத்து தர்ஷினியின் வீட்டிற்கு சென்ற பக்கத்து வீட்டுக்காரர் கதவினை தட்டி நீண்டநேரம் திறக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவினை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது தர்ஷினி சுடிதார் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

இச்சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து புத்தாடை வாங்குவதற்கு பணம் தராததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துறையூர் அருகே சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

Tags :

Share via