மதுபானம் கடத்திய சுங்க துறை கண்காணிப்பாளர் கைது
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வெளிநாட்டு மதுபானங்கள் கடத்தி வரப்படுவதாக சுங்க துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் வெளிநாட்டு மதுபானங்கள் கடத்தலில் சில சுங்க துறை அதிகாரிகளே ரகசியமாக ஈடுபடுவதாக உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உள்ள டியூட்டி பிரீஷாப்பின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சில ஊழியர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்களுக்கு சுங்க துறை கண்காணிப்பாளர் லூக் கே ஜார்ஜ் என்பவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இவர் பயணிகளின் ஆவணங்களை பயன்படுத்தி இந்த மோசடியில் ஈடுபட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இவர்கள் மீதுகுற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. அதில் சுங்க துறை கண்காணிப்பாளர் லூக் கே ஜார்ஜ், 13 ஆயிரம் பயணிகளின் பாஸ்போர்ட் விபரங்களை பயன்படுத்தி ரூ.6 கோடி மதிப்பிலான வெளிநாட்டு மதுபானங்களை கடத்தியாக கூறப்பட்டிருந்தது.
சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை தொடர்ந்து சுங்க துறையின் உயர் அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி சுங்க துறையின் கண்காணிப்பாளர் லூக் கே ஜார்ஜ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கேரளாவில் தற்போதுதான் முதல்முறையாக சுங்க அதிகாரி ஒருவர் மதுபான கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags :