நேருக்கு நேர் பள்ளி பேருந்து மோதி விபத்து: மாணவர்கள் இருவர் பலி

by Admin / 17-02-2022 04:51:36pm
நேருக்கு நேர் பள்ளி பேருந்து மோதி விபத்து: மாணவர்கள் இருவர் பலி

உத்தர பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் பகுதியில் இன்று காலை இரண்டு பள்ளி பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

ஷாப்பூர் - முசாப்பர்நகர் சாலையில் ரவீந்திரநாத் தாகூர் பள்ளி பேருந்தும், ஜி.டி.கொயங்கா பள்ளி பேருந்தும் மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்தன. 

அப்போது பனிமூட்டம் காரணமாக எதிரில் பேருந்து வருவது தெரியாமல் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இந்த கோர விபத்தில், 2 மாணவர்கள் மற்றும் ஓட்டுனர் ஒருவர் என மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும், 9 மாணவர்கள் உள்பட 10 பேர் பலத்த காயமடைந்தனர். இதில் 4 பேர் மீரட் மருத்துவமனையிலும் மற்றவர்கள் மாவட்ட மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
சிறு காயங்களுடன் உயிர் தப்பிய மாணவர்களுக்கு முதலுதவி செய்து அவர்களை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கொரோனா தொற்றால் நீண்ட மாதங்களுக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரும் நிலையில் பள்ளி பேருந்து விபத்து பெற்றோர்களை அச்சமடைய வைத்துள்ளது.

 

Tags :

Share via