உக்ரைன் ராணுவத்தில் சேர 500 இந்தியர்கள் விண்ணப்பம்

by Admin / 09-03-2022 02:02:58pm
 உக்ரைன் ராணுவத்தில் சேர 500 இந்தியர்கள் விண்ணப்பம்

ரஷியாவுக்கு எதிராக சண்டையிட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சர்வதேச படை அணியை உருவாக்க உத்தரவிட்டார். இதற்காக இணையதளம் ஒன்றும் உருவாக்கப்பட்டது.

அதில் உக்ரைன் ராணுவத்தில் தன்னார்வலராக சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், எந்த நாட்டினரும் சேரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் விண்ணப்பித்தனர். சமீபத்தில் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் குலேபா கூறும் போது, “52 நாடுகளை சேர்ந்த 20 ஆயிரம் பேர் சர்வதேச படை அணியில் சேர்ந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே உக்ரைன் ராணுவத்தில் கோவையை சேர்ந்த மாணவர் ஒருவரும் சேர்ந்துள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இந்தநிலையில் உக்ரைன் ராணுவத்தில் சேர 500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

உக்ரைன் உருவாக்கி உள்ள சர்வதேச படை அணியில் சேர சில முன்னாள் படை வீரர்கள் உள்பட 500 பேர் விண்ணப்பித்து உள்ளதாக தூதரக தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக் கிறது.

உக்ரைன் ராணுவத்தில் சேர விண்ணப்பித்தாலும் அதற்கு நீண்ட செயல் முறைகள் உள்ளது. அதை ஆராய்ந்த பிறகுதான் உக்ரைன் அரசு தன்னார்வலர்களின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் ராணுவத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, சுவீடன், மெக்சிகோ, லிதுவேனியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் இணைந்துள்ளனர்.

 

Tags :

Share via