டாஸ் வென்ற இந்திய அணி

by Admin / 12-03-2022 11:54:15am
டாஸ் வென்ற இந்திய அணி

12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். 

இந்நிலையில் ஹாமில்டனில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, ஸ்டாபானி டெய்லர் தலைமையிலான வெஸ்ட்இண்டீசுடன் மோதுகிறது. 

வெஸ்ட்இண்டீஸ் அணி தனது முந்தைய ஆட்டங்களில் நியூசிலாந்து, இங்கிலாந்தை வீழ்த்தி வலுவான நிலையில் இருக்கிறது. இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை பந்தாடியது. அடுத்த ஆட்டத்தில் சொதப்பல் பேட்டிங்கால் நியூசிலாந்திடம் ‘சரண்’ அடைந்தது.

இந்நிலையில் இன்று காலை தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி வெஸ்ட்இண்டீஸ் அணி பந்துவீச்சைத் தொடங்க உள்ளது. 

முன்னதாக இதுதொடர்பாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரமேஷ் பவார் நேற்று அளித்த பேட்டியில் ‘நாம் நினைத்த மாதிரி விஷயங்கள் எல்லாம் சாதகமாக அமையாத போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டமும் ஒன்றாகும். உண்மையை சொல்லப்போனால் முதல் 20 ஓவர்களில் நாங்கள் மந்தமாக பேட்டிங் செய்த விதம் எனக்கு ஆச்சரியம் அளித்தது. 

சீனியர் வீராங்கனைகளான மிதாலி ராஜ், ஸ்மிர்தி மந்தனா, ஜூலன் கோஸ்வாமி ஆகியோர் கூடுதல் பொறுப்புடன் செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடி தர வேண்டியது அவசியமானதாகும்’ என்று கூறியிருந்தார்.

 

Tags :

Share via