ஏராளமான வீடுகள்,சர்ச்சுக்களில் திருடியவன் கள்ளக்காதலியுடன் கைது.

by Editor / 01-01-2023 04:34:22pm
ஏராளமான வீடுகள்,சர்ச்சுக்களில் திருடியவன் கள்ளக்காதலியுடன் கைது.

குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தலத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 12-ந்தேதி நள்ளிரவு மர்ம நபர்கள் புகுந்து மாதா சொரூபத்தில் கிடந்த 7 பவுன் தங்க நகை மற்றும் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தையும் திருடி சென்றனர். இது குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இந்தநிலையில் குளச்சல் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையிலான போலீசார் புத்தாண்டை முன்னிட்டு நேற்று இரவு குளச்சல் வெட்டுமடை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அங்கு ஒரு வாலிபர் சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்தார். மோட்டார் சைக்கிளின் பின்னால் பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் இருவரையும் குளச்சல் போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கருங்கல் அருகே கப்பியறை பகுதியை சேர்ந்த சாபுமோன் (வயது 37) என்பதும், அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த பெண் நூர்ஜகான் (43) என்பதும் தெரியவந்தது.

தற்போது சாபுமோன் நெல்லை மாவட்டம் காவல்கிணறு விலக்கு பகுதியில் வசித்து வந்துள்ளார். மேலும் சாபுமோன் வள்ளியூரில் 8 வருடங்களாக கோழிப்பண்ணை நடத்தி வந்துள்ளார். இந்த பண்ணையில் நூர்ஜகான் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பண்ணையருகே பிள்ளைகளுடன் தனி வீட்டில் வசித்தார். சாபுமோனுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. இவர் மனைவியுடன் பண்ணையருகே வேறு தனி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நூர்ஜகான் - சாபுமோன் இடையே கடந்த சில வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. 

தொடர்ந்து நடத்திய விசாரணையில், சாபுமோன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தலம் மற்றும் பல இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளதும் தெரியவந்தது. இதுபோல் இரணியல் போலீஸ் சரகத்தில் 7 திருட்டு உள்பட மாவட்டம் முழுவதும் 16 சர்ச், வீடுகளில் நடந்த திருட்டு சம்பவங்களில் அவருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து குளச்சல் போலீசார் சாபுமோன் மற்றும் நூர்ஜகான் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 45 பவுன் தங்க நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கொள்ளையடித்த பணத்தில் சாபுமோன் கள்ளக்காதலியுடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று உல்லாசமாக சுற்றி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

ஏராளமான வீடுகள்,சர்ச்சுக்களில் திருடியவன் கள்ளக்காதலியுடன் கைது.
 

Tags :

Share via