நம்ம வீட்டுலேயே பங்குனி உத்திரம் குலதெய்வ குலசாஸ்தா வழிபாடு:

by Editor / 18-03-2022 09:26:11am
நம்ம வீட்டுலேயே பங்குனி உத்திரம் குலதெய்வ குலசாஸ்தா வழிபாடு:

வருஷத்துக்கு ஒருமுறை நாமெல்லாம் நம்ம குலதெய்வம் கோவிலுக்கு போய் சாமி கும்பிடுவோம். இந்த வருஷம் நாம எல்லாம் வெளியே போக
முடியாத நிலைமையில இருக்கோம்.ஆனாலும் நம்ம குலதெய்வ வழிபாட்டை நாம மறக்காம செய்ய வேண்டும். குலதெய்வம் அருளால் நம்ம குடும்பம் தழைக்க, இந்த வருஷம் நம்ம வீட்டுலேயே குலதெய்வ வழிபாட செய்வோம்.


நம்ம வீடெல்லாம் முதல் நாளே பெருக்கி, மெழுகி சுத்தப்படுத்தி, பூஜையறை விளக்கு மற்றும் சாமான்களை சுத்தப்படுத்தி வைச்சு, வாசலிலே மாவிலை, வேப்பிலை தோரணம் கட்டி, பசுஞ்சாண நீர் அல்லது மஞ்சள் நீர் தெளித்து மாக்கோலம் இடுவோம். 


இந்த வருடம் பங்குனி உத்திரத்தன்று நம்ம வீட்டு பூஜையறையில நம்ம குலதெய்வ, குலசாஸ்தா படங்கள் இருந்தா அலங்காரம் பண்ணி வைச்சுக்கலாம். படங்கள் இல்லாதவங்க, மஞ்சள் அல்லது சந்தனத்தில் குலதெய்வமா நினைச்சு பிடிச்சு  வைச்சுக்கோங்க. ஒரு நிறை குடம் தண்ணியில மஞ்சள், வேப்பிலை போட்டு பூஜையறையில் வையுங்க..

குலதெய்வம் கோவிலுக்கு போய் நாம செய்யும் பிரார்த்தனைகளை குடும்பமா ஒன்று கூடி, மனசார வீட்டில செய்யுங்க. வசதியிருந்தா வீட்டுல சுத்த பத்தமா பச்சரிசி சாதம் வடிச்சு, சாம்பார், அவியல்னு சமைச்சு வீட்டுலயே படையல் போட்டோ, அல்லது சக்கரை பொங்கல் வைத்தோ நம்ம வழிபாட்டை முறையா வீட்டிலயே செய்வோம்....

குலதெய்வத்திடம் இந்த வருஷம் எங்களால கோவிலுக்கு வந்து உன்ன கும்பிடமுடியலை சாமி, அதனால வீட்டுல இருந்தே உன்ன நினைச்சு கும்பிடுறோம், எங்க குற்றம் குறைகளை எல்லாம் பொறுத்து நோய் நொடியில்லாம எங்களை காக்க வேணும்னு சொல்லி மனசார கும்பிடுங்க... முடிஞ்சா ஒரு மஞ்ச துணியில ஒரு பதினொரு ரூபாய் முடிஞ்சு
வைச்சு, இந்த நோய் நொடி பரவல் எல்லாம் தீர்ந்து, மக்கள் வாழ்க்கை சகஜ நிலைமைக்கு திரும்புனா அதற்கு அடுத்த உத்திரம் நட்சத்திரத்துல (அல்லது ஒரு நல்ல நாளிலோ) உன் கோவிலுக்கு வந்து இந்த முடிஞ்சு வைச்ச பணத்தை உண்டியல்ல போட்டு, குடும்பத்தோட வந்து தரிசனம் பண்ணுறோம்னு வேண்டிக்கோங்க.


குடும்பத்தோட குலதெய்வ வழிபாட்டை செஞ்சு, கூட்டா உக்காந்து படையல் சோறு பிரசாதத்தை சாப்பிடுங்க... மறுநாள் அந்த நிறைகுடம் தண்ணீரை வீடெல்லாம் தெளிச்சுட்டு, சுத்தமான இடத்துல மரத்தடி அல்லது செடியில ஊத்திடுங்க....


குலதெய்வம் மனம் குளிருந்தால் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமுமாய் வாழ வேண்டும்.என் மனதில் தோன்றிய எண்ணமே இந்த பதிவு. நீங்கள் உங்கள் விருப்பம் போல் வழிபடுங்கள், ஆனால் பங்குனி உத்திரம் திருநாள் கோயிலுக்கு போக முடியாதவர்கள்.பங்குனி உத்திரம் தினத்தை முன்னிட்டு அன்றைய தினம் அவரவர் வசதிக்கு ஏற்ப குலதெய்வத்தை மனமுருகி குடும்பத்துடன் பூஜை வழிபாடு செய்யுங்கள்.!குல தெய்வம் என்பது அனைவருக்கும் முதல் தெய்வம்.

 

Tags : Worship of Panguni Uttiram Kuladeyva Kulasastha in our home:

Share via