கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் பதவியேற்பு

by Editor / 20-05-2021 04:25:17pm
கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் பதவியேற்பு

கேரளாவில் 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டது.

கேரள மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 99 இடங்களில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 2-வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது. மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக முதல்வராகப் பதவி ஏற்கும் நிகழ்ச்சியை பினராயி விஜயன் ஒத்திவைத்தார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக பினராயி விஜயன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் அவர பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். கரோனா கட்டுபபாடுகளை பின்பற்றி பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.

கேரளாவில் அமையும் புதிய அரசில் 21 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட 12 பேரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

இடதுசாரி கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளில் ஒரு எம்எல்ஏ மட்டும் வைத்திருக்கும் 4 கட்சிகளுக்கு அமைச்சரவையில் தலா 30 மாதங்கள் இடம் வழங்கப்பட உள்ளது.

புதிய அரசில் அமைச்சர்களாகப் புதியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எம்.வி.கோவிந்தன், கே.ராதாகிருஷ்ணன், கே.என்.பாலகோபால், பி.ராஜீவ், வி.என்.வாசன், சஜி செரியன், வி.சிவன்குட்டி, முகமது ரியாஸ், மருத்துவர் ஆர்.பிந்து, வீணா ஜார்ஜ், வி.அப்துல் ரஹ்மான் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

கடந்த அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவுக்கு அமைச்சரவையில் இடமில்லை. முதல் முறையாக எம்எல்ஏவான பினராயி விஜயனின் மருமகன் முகமது ரியாஸுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via