உடனடி நடவடிக்கை எடுத்த உதயநிதி- மகிழ்ச்சியில் சேப்பாக்கம் மக்கள்!

by Editor / 23-05-2021 07:11:37am
உடனடி நடவடிக்கை எடுத்த உதயநிதி- மகிழ்ச்சியில் சேப்பாக்கம் மக்கள்!

சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட புதுப்பேட்டை, கொய்யாத் தோப்பு பகுதியில் மலைபோல் தேங்கிக் கிடந்த குப்பைகள், அத்தொகுதி எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையால் அகற்றப்பட்டன.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட கொய்யாத்தோப்பு பகுதியில் சில தினங்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதி மக்கள், 'குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் குப்பைகள் அகற்றப்படுவதில்லை. கழிவுநீர் வழிந்தோடுகிறது. மாநகராட்சி கழிப்பறை பராமரிப்பில்லாமல் கிடக்கிறது' என்று புகார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அப்பகுதியை பார்வையிட்ட உதயநிதி ஸ்டாலின், அங்கு மலைபோல் தேங்கிக் கிடந்தகுப்பைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்கள் அப்பகுதி முழுவதையும் தூய்மைப்படுத்தினர். இது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள்கூறும்போது, 'உதயநிதிக்கு கருணாநிதியின் பேரன், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன், தொகுதி எம்எல்ஏ, நடிகர் ஆகிய பெரிய பின்புலங்கள் உள்ளன. ஆனால் அவர் மிக எளியவராக, எங்களில் ஒருவராக, எங்கள் பகுதிக்கு வந்து, குறைகளை கேட்டறிந்தார். ஒரே நாளில் குப்பைகளை அகற்றி, கழிவுநீர் ஓடுவதை தடுத்தார். மேலும் அடுத்த நாளே வந்து, பணி
கள் நடைபெற்றதா எனவும் ஆய்வு செய்தார். இதையெல்லாம் பார்க்கும்போது, எங்களுக்கு 'முதல்வன்' திரைப்படத்தில் வந்த காட்சிகளை நிஜத்தில் பார்த்ததுபோல் இருந்தது' என்றனர். திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி வீடு வீடாக வரும் மாநகராட்சி வாகனத்தில் மட்டுமே, மக்கள் குப்பைகளை வகை
பிரித்து கொட்ட வேண்டும். வேறு எங்கும் குப்பைகளை கொட்டக்கூடாது. இதைத்தான் மாநகராட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் கொய்யா தோப்பு பகுதியில் இரு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு இடையே சேவைப் பணிகளுக்காக விடப்பட்ட காலி இடத்தில் பொதுமக்கள் குப்பைகளை வீசுகின்றனர்.

உதயநிதியின் அறிவுறுத்தலால் அங்கு மாநகராட்சி குப்பைகளை அகற்றியுள்ளது. அதேநேரத்தில் ஒரு வளாகத்துக்குள் குப்பைகளை அகற்றுவது மாநகராட்சியின் பொறுப்பு இல்லை. அவர்களை தொடர்ந்து நிர்பந்தித்தால், இதைகூடுதல் வேலை பளுவாகவே கருதுவார்கள். அந்தந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில், குடியிருப்போர் நலச் சங்கங்கள் தொடங்கி, தங்கள் வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வாரியம் அறிவுறுத்துகிறது. இதற்கு குடியிருப்பு வாசிகள் யாரும் முன்வருவதில்லை. இவைஎல்லாம் மாறினால் மட்டுமே இதுபோன்ற பகுதிகளில் நீடித்த நிலையான தூய்மையை உறுதி செய்ய முடியும்

 

Tags :

Share via