கருமுட்டை விற்பனை விவகாரம்- மருத்துவமனைகளுக்கு போலீசார் சம்மன்.
ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, சிறுமியின் கருமுட்டைகளை தனியார் மருத்துவமனைகள் மூலமாக விற்பனை செய்து வந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பான புகாரின் பேரில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அவரது இரண்டாவது கணவர், புரோக்கராக செயல்பட்ட மாலதி, மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த ஜான் என்பவர் ஆகிய நால்வரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதில் சிறுமியின் கருமுட்டைகள் 8 முறை எடுக்கப்பட்டு தனியார் மருத்துவமனை மூலமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் வளர்ப்பு தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.இதுதொடர்பாக ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவல்துறையுடன் இணைந்து சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர். மேலும் ஈரோடு காப்பகத்தில் உள்ள சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில், சேலம்,ஓசூர்,திருவனந்தபுரம்,திருப்பதி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்த நிலையில் அனைத்து இடங்களுக்கும் சென்று ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் சேலம் மற்றும் ஓசூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் சேலம் மற்றும் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஈரோடு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
Tags : Egg sale issue- Police summon hospitals.