உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி பெண் பலி; 5 பேர் படுகாயம்

by Editor / 30-06-2022 08:42:00am
உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி பெண் பலி; 5 பேர் படுகாயம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் புதன்கிழமை பெய்த மழையால் மாநிலத்தின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதார்நாத் சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியானார். அவர்கள் பயணித்த வாகனம் பாறை இடுக்குகளில் சிக்கியதில், மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.

ருத்ரபிரயாக்-கௌரிகுண்ட் தேசிய நெடுஞ்சாலையில் சோன்பிரயாக் அருகே புதன்கிழமை மாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக ருத்ரபிரயாக் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி நந்தன் சிங் ராஜ்வார் தெரிவித்தார்.

விபத்தின் போது வாகனத்தில் 11 பேர் இருந்ததாகவும், அவர்கள் கேதார்நாத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

சோன்பிரயாக்-கௌரிகுண்ட் ஷட்டில் சர்வீஸில் ஈடுபட்டிருந்த வாகனம், முன்காட்டியாவுக்கு அருகில் உள்ள மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, நிலச்சரிவில் சிக்கியது. பாறைகள் உருண்டு விழுந்ததில், இடிபாடுகளுக்குள் வாகனம் சிக்கி அப்பளமாக நொறுங்கியது.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை விரைவுப்படுத்தினர்.இதில், மகாராஷ்டிராவின் அகமதுநகரைச் சேர்ந்த பெண் 62 வயதான புஷ்பா மோகன் போன்ஸ்லே என அடையாளம் காணப்பட்டார். அவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக அதிகாரிகள்  தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 

Tags : Woman killed in Kedarnath landslide in Uttarakhand; 5 people were injured

Share via