குரூப் 1 தேர்வில் லாவண்யா மாநில அளவில் முதலிடம்.

by Editor / 15-07-2022 07:53:50pm
குரூப் 1 தேர்வில் லாவண்யா மாநில அளவில் முதலிடம்.

தமிழ்நாடு அரசில் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர் உள்ளிட்ட குரூப் 1 பணியிடங்களில் காலியாக உள்ள 66 இடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2021 ஜனவரி 3-ம் தேதி நடைபெற்றது.


அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த மார்ச் 4,5 & 6 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. முதன்மைத் தேர்வை 3,800 பேர் எழுதிய நிலையில், அதில் 137 பேர் மட்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.


137 பேருக்கும் கடந்த 3 தினங்களாக நேர்காணல் நடைபெற்று வந்த நிலையில், தற்போது தகுதியானவர்களின் விவரங்களை TNPSC வெளியிட்டுள்ளது. நேர்காணலில் பங்கேற்ற 137 நபர்களின் விவரங்களும் http://www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

முதன்மைத் தேர்வு மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் ஒன்றாக கணக்கிடப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் இட ஒதுக்கீடு அடிப்படையில் தகுதியான நபர்கள் 66 பணியிடங்களுக்கும் தேர்வாக உள்ளனர்.


66 பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற குரூப் 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா மாநில அளவில் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.முதன்முறையாக இந்த தேர்வு முடிவுகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான முன்னுரிமையும் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Lavanya topper at state level in group 1 examination.

Share via