10ம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை - அக்கா கணவர் கைது
எடப்பாடி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை குடித்து விட்டு வந்து தாயையும், சிறுமியையும் அடித்ததால், சிறுமி கொங்கணாபுரம் பகுதியில் வசிக்கும் தனது அக்கா வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார். சிறுமியின் அக்கா நூல் மில்லுக்கு வேலைக்கு செல்கிறார். இந்நிலையில், அக்காவின் கணவர் அழகேசன் (26), சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி தனிமையில் இருந்துள்ளார். இதனால், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக அழகேசனிடம் கூறியுள்ளார்.
அதற்கு அவர், இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம். குழந்தை பிறந்த பின் சொல்லிக் கொள்ளலாம் என்று கூறியதால் சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்தார். இந்நிலையில், கடந்த 6ம் தேதி பள்ளிக்கு சிறுமி சென்றபோது சோர்வாக இருந்ததை பார்த்த பள்ளி ஆசிரியர் அவரது பெற்றோரை வரவழைத்துள்ளார்.
இதையடுத்து, பெற்றோர் சிறுமியை எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 9 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், சிறிய வயது என்பதால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆபரேஷன் மூலம் பெண் குழந்தை பிறந்தது.
இது குறித்து சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதியிடம் சிறுமி தன்னை கர்ப்பமாக்கி குழந்தை பிறப்புக்கு காரணம் தன் அக்காவின் கணவர் அழகேசன் தான் என்று வாக்குமூலம் அளித்தார். அதன்படி ஆய்வாளர் வளர்மதி அழகேசன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Tags :