சாரண சாரணியர் இயக்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்

by Staff / 12-09-2022 04:15:36pm
சாரண சாரணியர் இயக்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்

சாரண சாரணியர் இயக்கம் என்பது பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படக் கூடியது. அதன் தலைவராக மாநிலத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் கடந்த ஆட்சியில் இப்பொறுப்பில் ஹெச்.ராஜா  இயக்கத்தின் தலைவராக சில காலம் பதவி வகித்தார். ஆனால் அதன் பிறகு நடந்த சாரண சாரணியர் இயக்கத்திற்கான தலைவர் போட்டியில் எச்.ராஜா படுதோல்வி அடைந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சி பொறுப்பேற்றுக்கொண்ட தி.மு.க அரசு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் மீதான தனது பார்வையை செலுத்த தொடங்கியது. பல ஆண்டுகளாக சுதந்திர தின விழாவில் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கும் விழா நடத்தப்படாமலே இருந்தது. இந்தச் சூழலில் ஆட்சிக்கு வந்த முதல் சுதந்திர தின விழாவிலேயே அமைச்சர் அன்பில் மகேஷ் சாரண இயக்கத்தினருக்கு விருதுகளை வழங்கினார்.
மேலும் அமைச்சர் அன்பில் மகேஷ் இயக்கத்தின் தலைமையகத்தில் கொடியேற்றி விழாக்களிலும் கலந்துகொண்டார். இதையடுத்து பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவர் பொறுப்பிற்கு தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி இந்த இயக்கத்தின் தலைவர் பதவிக்கு செப்டம்பர் 10ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். அமைச்சரை எதிர்த்து யாரும் போட்டியிட மனு அளிக்காத காரணத்தால் அன்னபோஸ்ட்டாக அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் மீண்டும் மாநிலத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை பாரத சாரண சாரணியர் இயக்கம் தற்போது வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நாவலர் நெடுஞ்செழியன், அரங்கநாயகம், பேராசிரியர் அன்பழகன், தங்கம் தென்னரசு ஆகியோர்களுக்குப் பிறகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் பாரத சாரணர், சாரணியர் இயக்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது,முதலில் என்மீது நம்பிக்கை வைத்து யாரும் என்னை எதிர்த்து போட்டியிடவில்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் எனது நன்றிகள். பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பதவி ஏற்ற போது அடைந்த பெருமை இப்போதும் எனக்கு ஏற்பட்டது. இயக்கத்தின் உறுப்பினர்கள் கோரிக்கைகள் வைத்துள்ளார்கள்,அவர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்பட்டு, பெரும்பாலான பள்ளிகளில் சாரண சாரணியர் இயக்கம் தொடங்கப்படும்’ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.

 

Tags :

Share via