துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட தங்கம் பறிமுதல்

by Staff / 15-09-2022 04:54:15pm
துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினார். அப்போது, சென்னையைச் சேர்ந்த முருகன் கோவிந்தராஜ் (32) என்ற பயணியின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அந்த பயணியை நிறுத்தி சோதனையிட்டனர். அவருடைய உடைமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல் பயணியை முழுமையாக சோதித்தனர்.

அவருடைய ஜீன்ஸ் பேண்டில் அணிந்திருந்த பெல்டின் பக்கில், தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. மேலும் அவருடைய ஜீன்ஸ் பேண்டிற்குள் 3 தங்கக்கட்டிகள் வைத்து தைக்கப்பட்டு இருந்தது. அவரிடம் இருந்து ரூபாய் 26 லட்சம் மதிப்புடைய 580 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் துபாயில் இருந்து இன்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னைக்கு வந்தது. அந்த விமானம் மீண்டும் டெல்லிக்கு, உள்நாட்டு விமானமாக புறப்பட்டு செல்ல வேண்டும். இதை அடுத்து விமான ஊழியர்கள் விமானத்தை சுத்தப்படுத்திய போது, விமானத்தின் கழிவறையில் ஒரு சிறிய பாா்சல் இருந்தது. அதை எடுத்து பிரித்து பார்த்த போது, அதில் 220 கிராம் தங்க செயின் இருந்தது. அதன் மதிப்பு ரூபாய் 10 லட்சம். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள், அதை சுங்கத் துறையிடம் ஒப்படைத்தனர். சுங்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து துபாயில் இருந்து வந்த இரண்டு விமானங்களில் ரூ. 36 லட்சம் மதிப்புடைய 800 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via