அதிமுக அரசை எதிர்த்து தொடர்ந்த வழக்கு  : அமைச்சர் கே.என்.நேரு வாபஸ் பெற்றார் 

by Editor / 15-06-2021 04:10:50pm
அதிமுக அரசை எதிர்த்து தொடர்ந்த வழக்கு  : அமைச்சர் கே.என்.நேரு வாபஸ் பெற்றார் 



தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி, கிராம சபை கூட்டத்தை ஆண்டுக்கு நான்கு முறை ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் நடத்த வேண்டும். ஆனால், கொரோனா ஊரடங்கு விதிகளால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி, அக்டோபர் 2ஆம் தேதி நடத்த வேண்டிய கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. இதை எதிர்த்தும், கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவிடக் கோரியும் திமுக தரப்பில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவும், மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுச் செயலாளர் ஏ.ஜி.மவுரியாவும் பொது நல மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போதைய தமிழ்நாடு அரசு தரப்பில், கொரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் வராததால் கிராம சபை கூட்டங்களை நடத்துவது சரியாக இருக்காது என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குகள்  மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அமைச்சர் கே.என். நேரு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கில் மேற்கொண்டு நடத்து விரும்பவில்லை எனவும், வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கே.என்.நேரு தரப்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதேசமயம் மக்கள் நீதி மய்யம் மௌரியா தொடர்ந்த வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர். சமீபத்தில் மௌரியா கட்சியிலிருந்து விலகிவிட்டார்.

 

Tags :

Share via