விஷவாயு தாக்கியதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மயக்கம்

by Staff / 15-10-2022 03:19:52pm
விஷவாயு தாக்கியதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மயக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியின் காமராஜ் காலனியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1,500 பேர் பயின்று வருகின்றனர்.இந்த பள்ளியில் மதியம் ஒரு மணிக்கு உணவு இடைவேளை விடப்பட்டு பள்ளி மாணவர்கள் அனைவரும் உணவு சாப்பிட்ட பிறகு மீண்டும் 2 மணி அளவில் பள்ளி அறைக்குள் சென்றுள்ளனர். சற்றுநேரம் கழித்து நடுநிலைப் பள்ளியின் 6-வது மற்றும் 7-வது அறையில் உள்ள மாணவர்களுக்கு திடீரென்று விஷவாயு தாக்கி கண் பார்வை மங்கலாகவும் ஒரு சில மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அடுத்தடுத்து ஒருவருக்கு பின் ஒருவர் மயங்கினர்.

இந்த நிலையில் மாணவர்கள் கீழே விழத் தொடங்கியதும் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவைத்து அதன் மூலமாக பள்ளி மாணவர்களை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சம்பவம் பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த நகர காவல் துறையினர் இது குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்களும் மற்றும் உறவினர்களும் மாணவர்களுக்கு என்ன ஆயிற்று என்று பதறி அடித்து ஓசூர் அரசு மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.

 

Tags :

Share via