உதயநிதிஸ்டாலின் இடம் மன்னிப்பு கேட்கவேண்டும் பொன் ராதாகிருஷ்ணன்

by Staff / 23-11-2022 05:46:05pm
உதயநிதிஸ்டாலின் இடம் மன்னிப்பு கேட்கவேண்டும் பொன் ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்டம் சம்பிரதாயங்கள் மீறப்பட்டதற்கு உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் முகநூலில் கூறியுள்ளதாவது " கன்னியாகுமரி மாவட்டம் , சாமித்தோப்பில் உள்ள அய்யா வைகுண்டர் பதியில் வழிப்பாட்டு நெறிமுறை தனித்துவமிக்க ஒன்று. அதிலும் வைகுண்ட பதியின் பள்ளியறை அருகில் நின்று வணங்கும் போது நெற்றியில் சின்னமும் தலையில் தலைப்பாகையும் கட்டி கொண்டு வணங்குதல் தான் முறை.

ஆனால் திமுக சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் , திமுக இளைஞர் அணித் தலைவருமான திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் , சாமித்தோப்பு வருகையின் போது தலைப்பாகை இல்லாமல் பள்ளியறை வரை சென்று வணங்கி இருக்கிறார். இது முற்றிலும் தவறான ஒரு செயல்.

அய்யா வைகுண்டர் பதியில் எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்ற நெறி திமுக நாகர்கோவில் மேயர் திரு மகேஷ் அவர்களுக்கும் , உதயநிதி அருகில் உள்ளோருக்கும் , சாமித்தோப்பு பதியில் உள்ள பொறுப்பாளர்களுக்கும் தெரிந்திருந்தும் திரு உதயநிதி அவர்களிடம் தெரிவிக்காதது ஏன்?

அய்யா வைகுண்டர் மீது மிகுந்த பக்தி கொண்டவன் என்ற முறையில் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் செயல் மிகுந்த மனவருத்தத்தை எனக்கு மட்டுமல்ல ஆயிரக்கணக்கான அய்யா வைகுண்டரின் பக்தர்களுக்கும் தந்திருக்கும். இச்செயலுக்கு மன்னிப்பு கேட்பதோடு , சாமித்தோப்பு வைகுண்டர் பதிக்கே வந்து அங்கு கடைப்பிடிக்கப்படும் வழிப்பாட்டு நெறியுடன் மீண்டும் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழிபாடு செய்வதே அவர் செய்த இந்த தவறுக்கான பரிகாரமாக இருக்கும். செய்வார் என்று நம்புகிறேன்.என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

 

Tags :

Share via