தங்கையை திருமணம் செய்து வைக்காத அண்ணன் வெட்டிக் கொலை

by Staff / 01-12-2022 12:03:39pm
தங்கையை திருமணம் செய்து வைக்காத அண்ணன் வெட்டிக் கொலை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ஜோதி (27), மகள் பிரியா (20). விவசாய வேலை பார்த்து வருகிறார்கள். ஜோதி துபாயில் கட்டிட வேலை பார்த்துவிட்டு தங்கையின் திருமணத்திற்காக கடந்த 6 மாதத்திற்கு முன் சொந்த ஊர் திரும்பினார். இந்த நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு இவரது தங்கை பிரியாவிற்கும் மதுரை மாவட்டம் கச்சைகட்டியை சேர்ந்த ஒரு இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

கடந்த இரண்டு வாரங்களாக பத்திரிக்கை வைப்பது உள்ளிட்ட திருமண ஏற்பாடுகளை தடல்புடலாக செய்து வந்துள்ளார். இந்நிலையில் அழகர்கோவில் மலை அடிவாரத்தில் உள்ள தங்களது தோட்டத்து வீட்டில் (திங்கட்கிழமை இரவு) ஜோதி தனியாக தூங்க சென்றுள்ளார். இந்த நிலையில் இவரது கழுத்தில் பின்பகுதியில் மர்ம நபர் வெட்டியதில் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார். அங்கு சென்று பார்த்த தந்தை கணேசன் கதறி அழுது உறவினர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது. முன் விரோதம் இருக்கும் அடிப்படையில் அந்த ஊரைச் சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளி பிரபாகரன் (30) (எ) செல்லம் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது ஜோதியின் தங்கையை திருமணம் செய்ய பெண் கேட்டுள்ளது தெரியவந்தது.

இந்த நிலையில் வேறொரு நபருடன் திருமணம் வரும் (டிசம்பர் 5 ஞாயிற்றுக்கிழமை) முடிவு செய்ததால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் 'உன் தங்கையை எனக்கு திருமணம் செய்து கொடு' என்று கூறி தனியாக தோட்டத்து வீட்டில் இருந்த ஜோதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது ஜோதி 'நீ வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவன்' என்று கூறி திருமணம் செய்து கொடுக்க இயலாது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்தரமடைந்த பிரபாகரன் மறைத்து வைத்த அறிவாளால் ஜோதியை பின்புறமாக தாக்கி வெட்டிக் கொன்றதாகபோலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து பிரபாகரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலையில், வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில், ஏ.எஸ்.பி., அருண்கபிலன், இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தலைமையில் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.தங்கை திருமணத்திற்கு வந்த அண்ணன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நத்தம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via