மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மீண்டும் வழங்க வேண்டும்.விஜய்வசந்த்

by Staff / 13-12-2022 03:53:47pm
 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மீண்டும் வழங்க வேண்டும்.விஜய்வசந்த்

பாராளுமன்ற கூட்டத்தொடரில்  விஜய்வசந்த் எம். பி. தெரிவித்து : 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை இன மாணவர்களுக்கான கல்வித் தொகையை மத்திய அரசு ரத்து செய்யக்கூடாது என நான் வேண்டிக் கொள்கிறேன். மாணவர்களை பள்ளிக்கூடத்திற்கு வர ஊக்குவிப்பதும், அவர்களுக்கு இலவச கல்வி அளிப்பதும் நமது அரசின் கடமையாகும். சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு கல்வி மற்றும் கல்வி ஊக்கத்தொகை அளிப்பதற்கு டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த ஊக்கத்தொகை யானது 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய ஜெயின் புத்த மதங்களை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. கல்வி பயில்வதற்கு பண வசதி இல்லாமல் 1 முதல் 8 வரை பயிலும் 24 சதவீத ஆண்களும், 15 சதவீத பெண்களும் கல்வியை பாதியில் கைவிடுவதாக கணக்குகள் கூறுகின்றன. பள்ளி மாணவர்கள் கல்வியை கைவிடாமல் இருப்பதற்கு கல்வி ஊக்கத்தொகை அவசியம் என கல்வி மற்றும் கல்வி கொள்கைக்கான பாராளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது. மாணவர்களை பள்ளிக்கூடத்திற்கு கொண்டு வருவதற்காகவும் அவர்கள் கல்வியை கைவிடாமல் இருப்பதற்காகவும் முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் காமராசர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்கினார். இன்றைய தமிழக முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் மாணவர்களுக்கு முட்டையுடன் கூடிய மதிய உணவு மற்றும் காலை சிற்றுண்டி ஆகியவற்றை வழங்கி வருகின்றார். நாம் செலவழிக்கும் பணத்தை விட கல்வி மிக முக்கியம் என்பதை இது உணர்த்துகிறது. பொருளாதார சுமை இல்லாமல் குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதற்கு இந்த ஊக்கத்தொகை மிகவும் உதவுகிறது. ஆனால் இன்று மத்திய அரசு இந்த ஊக்கத் தொகை நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளது. கல்வி பயிலும் உரிமையின் கீழ் மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கப்படுவதால் இந்த ஊக்கத்தொகை வழங்கத்தேவையில்லை என்ற மத்திய அரசின் விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. கல்வி கட்டணத்திற்காக மட்டுமின்றி மாணவர்கள் புத்தகங்கள் மற்றும் கல்விக்கான இதர பொருட்கள் வாங்கவும், பள்ளிக்கூடத்துக்கு செல்வதற்கு மிதிவண்டிகள் போன்றவற்றை வாங்கவும் இந்த தொகை பயன் அளிக்கிறது. இந்தத் தொகை மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு செல்வதற்கு ஊக்கமளிக்கி றது. நமது நாடு 100 சதவீத கல்வி பயின்ற ஒரு நாடாக மாறினால் மட்டுமே நாம் வல்லரசாக மாற முடியும். இதற்காக அரசு அனைத்து தரப்பு மாணவர்களும் பள்ளிக் கல்வி பயில்வதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். சிறுபான்மை இன மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகையை மத்திய அரசு வழங்குவது மேதைகள் நிறைந்த ஒரு நாடாக நம் நாடு மாற படி கல்லாக அமையும். ஒரு பக்கம் டாக்டர் அம்பேத்க ருக்கு மரியாதை செலுத்தி விட்டு மறுபுறம் சமூக நீதியை நிலைநாட்ட இந்த அரசு முயற்சிகள் மேற்கொள்ள வில்லை. ஆகையால் உங்கள் மூலமாக சிறுபான்மை இன மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி ஊக்கத்தொகை தொடர்ந்து வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via