வாடிப்பட்டி அருகே வாலிபர் படுகொலை

by Staff / 10-01-2023 12:55:39pm
வாடிப்பட்டி அருகே வாலிபர் படுகொலை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை பழனியாண்டவர் கோவில் சாலையில் மலை அடிவாரத்தில் மினரல் வாட்டர் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளாக இயங்காமல் இருந்தது. அதன் அருகே தென்னந்தோப்பு உள்ளது.இங்கு சோழவந்தான் பூமேட்டு தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் சதீஸ் ( 30) பொறுப்பாளராக பணியாற்றி வந்தார். சதீஷ் பழனி பாதயாத்திரை செல்ல முடிவு செய்து இதற்காக தனது அண்ணன் கார் டிரைவர் மருதுபாண்டி (40) என்பவரை தனக்கு பதிலாக நிறுவனத்தில் இருக்க சொல்லிவிட்டு புறப்பட்டார். மதுரையை சேர்ந்த 17 வயது சிறுவனும் தோட்ட வேலை பார்ப்பதற்காக அங்கு தங்கி இருந்துள்ளான்.

இந்நிலையில் நேற்று பாதயாத்திரை செல்வதற்கு முன் தனது அண்ணனிடம் தகவல் சொல்லிவிட்டு போவதற்காக சதீஸ் தோட்டத்திற்கு வந்தார். அப்போது மருதுபாண்டி முகம் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சதீஸ், வாடிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அந்த நிறுவனத்தில் இருந்த 17 வயது சிறுவனை காணவில்லை. எனவே, மருதுபாண்டியை கொலை செய்தது யார்? எதற்காக சிறுவன் தலைமறைவானான்? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்

 

Tags :

Share via