ஈரோட்டில் அண்ணன் - தம்பி கத்தியால் குத்தி படுகொலை

by Staff / 01-02-2023 12:26:03pm
ஈரோட்டில் அண்ணன் - தம்பி கத்தியால் குத்தி படுகொலை

ஈரோடு முனிசிபல்காலனி கிருஷ்ணசாமி வீதியை சேர்ந்தவர் லோகநாதன். இவர்களுக்கு கவுதம் (வயது 30), கார்த்தி (26) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் செக் எண்ணெய், மசாலா பொடிகள், மலை தேன் போன்றவற்றை வீட்டிலேயே விற்பனை செய்து வந்தனர். இவர்களுக்கும், அவரது மாமாவான மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகத்துக்கும் முன்விரதம் இருந்து வந்தது. கவுதம், கார்த்தி ஆகியோருக்கும் ஆறுமுகசாமிக்கும் செல்போனில் பேசிக்கொள்ளும்போது வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்தநிலையில் நேற்று இரவு 8. 30 மணிஅளவில் கவுதம், கார்த்தி ஆகிய 2 பேரும் வீட்டில் இருந்தனர். அப்போது, அவர்களது வீட்டுக்கு வந்து தகராறு செய்து உள்ளார். சத்தம் கேட்டு கவுதம், கார்த்தி ஆகியோர் வீட்டில் இருந்து வெளியே வந்தனர். அப்போது அண்ணன்-தம்பிக்கும், ஆறுமுகசாமிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதை கார்த்தி செல்போனில் வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கார்த்தியையும், கவுதமையும் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் 2 பேரும் அங்கேயே சரிந்து விழுந்தனர். பின்னர் ஆறுமுகசாமி அங்கிருந்து தப்பி ஓடினார்.உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த கவுதம், கார்த்தி ஆகிய 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஒரு காரில் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் பலனளிக்காமல் அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.இதுகுறித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த கார்த்திக் நாம் தமிழர் கட்சியின் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக இருந்து வந்தார்.மேலும் இந்த கொலையில் ஆறுமுகசாமி உடன் மற்றொரு வரும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இரண்டு பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் பிடிக்க டவுன் டி. எஸ். பி ஆனந்தகுமார் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில் அண்ணன், தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

 

Tags :

Share via